முன்னாள் அமைச்சரின் மகன் ஆக்கிரமித்த கோயில் நிலம் மீட்பு!

Published On:

| By Balaji

சிவகங்கை மாவட்டத்தில் அறநிலையத் துறைக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது.

திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோயில் நிலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. சிவகங்கையில் கௌரி விநாயகர் கோயிலுக்குச் சொந்தமான அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் பாஸ்கரனின் மகன் உள்ளிட்ட அவரது உறவினர்கள் அபகரித்ததாகப் புகார் அளிக்கப்பட்டது.

சிவகங்கை திமுக நகரச் செயலாளர் துரை ஆனந்த் தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும் அறநிலையத் துறை அமைச்சரிடமும் இது தொடர்பாக புகார் அளித்தார்.

அதில் கௌரி விநாயகர் கோயிலுக்குச் சொந்தமாக 142 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் சிவகங்கை மேலூர் செல்லும் சாலையில், உள்ள சுமார் 11 ஏக்கர் நிலத்தை (சர்வே எண் 330 மற்றும் 335) முன்னாள் காதி மற்றும் கதர் கிராம தொழில் வாரிய துறை அமைச்சர் பாஸ்கரனின் மகன் மற்றும் அவரது உறவினர்கள் மோசடியாகப் பத்திரம் தயாரித்து அபகரித்து உள்ளனர். அதோடு அந்த இடத்தில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரனின் அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தி கம்பி வேலி அமைத்து திருமண மண்டபம் வணிக வளாகம் உள்ளிட்ட கட்டிடங்களைக் கட்டி வருவதாகக் குற்றம்சாட்டப்பட்டது. கோயில் நிலத்தை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இந்த புகாரைத் தொடர்ந்து சிவகங்கை அறநிலையத் துறை, வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பது உறுதியானதைத் தொடர்ந்து அங்குக் கட்டப்படும் கட்டடப் பணிகளைத் தடுத்து நிறுத்தி அப்பகுதிக்கு முழுவதுமாக சீல் வைத்தனர். அவ்விடத்தில் இது சிவகங்கை நகர் அருள்மிகு கௌரி திருக்கோயிலுக்குச் சொந்தமான இடம். இந்த இடத்தில் அத்துமீறி நுழைபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பலகையும் வைக்கப்பட்டது.

அதுபோன்று கோயில் நிலங்களை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

**-பிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share