தூய்மை இந்தியா திட்டத்தின்படி கிராமப்புறத்தில் தூய்மையையும் சுகாதாரத்தையும் மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன. இதில், ஊரக தூய்மை இந்தியா திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மாதக் கடைசிவரை அதாவது 2021 டிசம்பர் 31ஆம் தேதிவரை, நாட்டில் திறந்தவெளி மலம் கழிப்பு (ஓடிஎஃப்) ஒழிக்கப்பட்ட கிராமங்களின் எண்ணிக்கையில், தெலங்கானா மாநிலம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 14, 200 கிராமங்களில் 13 ஆயிரத்து 737 கிராமங்களில் திறந்தவெளி மலம் கழிப்பு முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 96.74 சதவீதம் ஆகும்.
அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் 35.39 சதவீதம் அளவுக்கு அதாவது 4 ஆயிரத்து 432 கிராமங்களில் திறந்தவெளி கழிப்பு இல்லை எனும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் ஆயிரத்து 511 கிராமங்களில் அதாவது 5.59 சதவீதம் அளவுக்கு திறந்தவெளிக் கழிப்பு இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது என்கிறது, தூய்மை இந்தியா திட்டத்தின் புள்ளிவிவரம்.
குஜராத் மாநிலமானது 0.45 சதவீதம் அளவுக்கு அதாவது 83 கிராமங்களில் இந்த நிலைமையை சாதித்திருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திறந்தவெளி மலம் கழிப்பின் மூலம் தொற்றுக்கிருமிகள் எளிதாகப் பரவி, வயிறு தொடர்பான கோளாறுகள், காலரா போன்றவை ஏற்பட்டு, பெரும் பாதிப்புகளை உண்டாக்குகின்றன. இதனால், ஐநா சுகாதார அமைப்புவரை இந்த நிலைமையை மாற்ற முனைப்பாக ஈடுபட்டுவருகின்றன.
கிராமப்புறங்களில் வீடுகளில் தனிக் கழிப்பிடங்கள் இல்லாததுதான் இதற்குக் காரணமாக இருக்கிறது என்பதால், வீடுதோறும் கழிப்பிடங்களைக் கட்ட உலகளாவிய அமைப்புகள் நிதியுதவியும் செய்கின்றன. இதன் ஒரு பகுதியாக, தூய்மை இந்தியா திட்டத்திலும் கழிப்பிடம் கட்டித்தருவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானா மாநிலத்தைப் பொறுத்தவரை, பல்லே பிரகதி என்கிற திட்டத்தின் மூலம் ஊரகப் பகுதிகளில் சுகாதார விழிப்புணர்வும் கட்டமைப்பு உருவாக்கமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திரவக் கழிவு மேலாண்மை தொடர்பான திட்டத்தின்படி கிராமப்புறத்தில் அனைத்து வீடுகளிலும் கழிவகற்றல் வசதி அமைக்கப்பட்டுள்ளது.
பல்லே பிரகதி திட்டத்தை முழு வீச்சாகச் செயல்படுத்தியதுதான், இந்த நிலையை எட்டியதற்கு அடிப்படையாக இருந்தது.” என்று அந்த மாநிலத்தின் ஊரக வளர்ச்சித் துறைச் செயலாளர் சரத் தெரிவித்துள்ளார்.
இந்த இலக்கில் ஏற்கெனவே தெலங்கானா மாநிலம்தான் முன்னிலையில் இருந்துவந்தது. புதிய முடிவிலும் அந்த மாநிலமே முதலிடம் பெற்றுள்ளது.
**-முருகு**
�,”