நடிகர் ரஜினி காந்த் கட்சி தொடங்குவது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கருத்து கூற மறுத்துவிட்டார்.
நடிகர் ரஜினிகாந்த் வரும் ஜனவரி மாதம் அரசியல் கட்சி ஆரம்பிக்கவுள்ளதாகவும், டிசம்பர் 31ஆம் தேதி அதற்கான அறிவிப்பை வெளியிடவுள்ளதாகவும் நேற்று அறிவித்தார். 2021 சட்டமன்ற தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றிபெற்று, தமிழகத்தில் நேர்மையான, வெளிப்படையான, ஊழலற்ற, சாதி மதச்சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாவது நிச்சயம் என்று தெரிவித்தார்.
இந்நிலையில், சிவகங்கையில் செய்தியாளர்கள் கேள்விக்குப் பதில் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ”ரஜினி முதலில் கட்சியைப் பதிவு செய்யட்டும் அதற்குப் பிறகு கேளுங்கள். கட்சியைப் பதிவு செய்யாத நிலையில் எதையும் சொல்ல முடியாது. இப்படியெல்லாம் நீங்கள் கேள்வி கேட்பீர்கள் என்று தெரியும் அதற்கெல்லாம் தயாராகத்தான் வந்துள்ளேன். ஜாக்கிரதையாக பதில் சொல்ல வேண்டும்” என்று தெரிவித்தார். துணை முதல்வர் ரஜினி கட்சி ஆரம்பிக்கவுள்ளதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளாரே என்ற கேள்விக்கு, அது அவருடைய கருத்து. யார் வேண்டுமானாலும் கருத்து கூறலாம். அதில் தவறு கிடையாது என்று கூறினார்.
அதுபோன்று, “2ஜி வழக்கு முடிந்தால் ஆ.ராசா எங்கிருப்பார் என்பது அனைவருக்கும் தெரியும். அவருடைய கட்சி அங்கம் வகிக்கும் கட்சி ஆட்சியிலிருந்த போது தான் 2ஜி வழக்கில் ஆ.ராசா சிறைக்குச் சென்றார். பாஜக ஆட்சியில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தால் கூட அரசியல் என்று சொல்லலாம். சிபிஐ உரிய ஆதாரத்தைச் சமர்ப்பிக்காததால் தான் அவர் தப்பியுள்ளார். நிரபராதி என்று அறிவிக்கப்படவில்லை” என்றும் குறிப்பிட்டுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
**-பிரியா**�,