கொரோனா பரவல் காரணமாக கடந்த இரு வாரமாக ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதோடு ஜனவரி 31ஆம் தேதி வரை கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், வரும் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்று கேள்வி பொதுமக்கள் மத்தியிலிருந்து வந்தது. அதே சமயத்தில் இந்த வாரம் முழு ஊரடங்கு இருக்காது என்ற தகவலும் பரவி மக்கள் மத்தியில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ள தமிழக அரசு, “ தமிழகத்தில் கொரோனா, ஒமிக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் நலன் கருதித் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் எதிர்வரும் 23-1-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும்.
இந்த முழு ஊரடங்கு நாளில் கடந்த 16-1-2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று முழு ஊரடங்கின்போது நடைமுறைப்படுத்தப்பட்ட அதே அத்தியாவசிய செயல்பாடுகள் அனுமதிக்கப்படும். தடை செய்யப்பட்ட செயல்பாடுகளுக்கான தடைகள் தொடரும்.
மேலும், வெளியூர்களிலிருந்து வரும் பயணிகளின் நலன் கருதி, சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையம் போன்ற இடங்களில் வழக்கமான ஆட்டோக்கள், செயலி மூலம் முன்பதிவு செய்து இயக்கப்படும் வாடகை கார்கள் பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்படும். மாவட்ட ரயில் நிலையங்களுக்கும் மற்றும் வெளியூர் பேருந்து நிலையங்களுக்கும் இது பொருந்தும். கொரோனா தொற்றிலிருந்து மக்களைக் காத்திட அரசு மேற்கொள்ளும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு அரசு கேட்டுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
**-பிரியா**
�,