முழு ஊரடங்கில் தளர்வு: எதற்கு அனுமதி?

Published On:

| By Balaji

நாளை முழு ஊரடங்கு அமலுக்கு வருகிற நிலையில், அதில் சில தளர்வுகள் அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டு செல்கிறது. தினசரி பாதிப்பு 10 ஆயிரத்தை நெருங்கும் நிலையில் கொரோனா பரவலைத் தடுக்க தமிழ்நாடு அரசு தியேட்டர்கள், ஹோட்டல்களில் 50 சதவீதம், திருமணத்திற்கு 100 பேர் மட்டுமே அனுமதி, இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு நேர ஊரடங்கு என பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக இரவு நேர ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிற நிலையில் நாளை முழு ஊரடங்கு(ஜனவரி 9) அமலுக்கு வருகிறது.

அதாவது சனிக்கிழமை இன்று(ஜனவரி 8) இரவு 10 மணி முதல் திங்கள் கிழமை காலை 5 மணிவரை ஊரடங்கு அமலில் இருக்கும். தமிழ்நாடு முழுவதும் நாளை முழு ஊடரங்கு அமலில் இருக்கும்போது மருத்துவம், பால், உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இந்த பணியில் ஈடுபடுபவர்களுக்காக சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை இயக்கப்படுகிறது. அதுவும் 50 சதவிகிதம்தான். தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே மின்சார ரயிலில் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், முகக்கவசம் அணியாத ரயில் பயணிகளுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே முழு ஊடரங்கு நாளில் எதற்கெல்லாம் அனுமதி என்பது குறித்து தமிழ்நாடு அரசு அறிவித்தாலும், அவ்வப்போது மக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கைகளின் அடிப்படையில் சில தளர்வுகளை அளித்து வருகிறது.

முழு ஊரடங்கிற்கு முன்பே பலரும் ஞாயிற்றுக்கிழமைகளில் திருமண தேதியை நிச்சயித்துவிட்டதால், அன்று திருமணத்திற்கு செல்ல அனுமதி உண்டா? இல்லையா? என மக்கள் குழப்பத்துடன் உள்ளனர். சிலர் திருமண தேதியை மாற்றி அமைத்துவிட்டனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசு இன்று(ஜனவரி 8) முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “ கொரோனா பரவலை தடுப்பதற்காக அரசு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட ஞாயிற்றுக்கிழமைகளில் ஏற்கனவே திருமணம் போன்ற குடும்ப நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி உண்டு. நிகழ்ச்சிக்கு செல்பவர்கள் திருமண அழைப்பு பத்திரிக்கைகளை காண்பித்து தங்களது பயணங்களை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.

திருமண மண்டபத்தில் 100 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். முழு ஊரடங்கு நாட்களில் நடைபெறும் திருமணம் போன்ற விழாக்களுக்கு செல்பவர்களுக்கு காவல்துறை அனுமதி வழங்கி முழு ஒத்துழைப்பு அளிப்பார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை திருமணத்திற்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டாலும், பொது போக்குவரத்து எதுவும் இயங்காததால், மக்கள் தங்கள் சொந்த வாகனங்கள் அல்லது வாடகை வாகனங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை அரசு மறைமுகமாக கூறியுள்ளது. ஏனெனில், ஞாயிற்றுக்கிழமையன்று போட்டித் தேர்வுகளுக்கு செல்பவர்கள் உரிய ஆவணங்களை காண்பித்து சொந்த அல்லது வாடகை வாகனங்களில் செல்லலாம் என்று தமிழ்நாடு அரசு ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளது.

இருப்பினும், அவசர காரணமாக மாநிலத்திற்குள்ளே நான்கு சக்கர வாகனங்களில் நீண்ட தூரம் பயணிக்க அனுமதி உண்டா என்பது குறித்த தெளிவான அறிவிப்பு இதுவரை வரவில்லை. கடந்தமுறை நடைமுறையில் இருந்த இ-பாஸ் அல்லது இ-பதிவு முறையும் இந்த முறை அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முழு ஊரடங்கின்போது தேவையில்லாமல் மக்கள் வெளிவருவதை தடுக்க தமிழ்நாடு முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

**வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share