இன்று வாக்குப்பதிவு தொடங்கியதிலிருந்தே முதியோர்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர்.
வாக்களிப்பதற்கு அரசு சார்பில் விடுமுறை அளிக்கப்பட்டாலும், சிலர் இன்றைக்கு விடுமுறை கிடைத்துவிட்டது, ஓய்வு எடுக்கலாம் என்று நினைத்துவிட்டு வாக்களிக்க செல்லாமல் இருப்பார்கள். ஒருசில இளைஞர்களும் வரிசையில் காத்திருந்து வாக்களிக்க கஷ்டப்பட்டுவிட்டு, ஜனநாயக கடமையை செலுத்த தவறிவிடுகின்றனர். இது ஒவ்வொரு தேர்தலிலும் நடக்கிறது.
இந்த நிலையில் இளைஞர்களுக்கு வழிகாட்டும் விதமாக, முதியவர்கள் தங்களின் ஜனநாயக கடமையை செலுத்தி வருகின்றனர்.
சென்னை முகப்பேரைச் சேர்ந்த சிவசங்கரன்(83) – இந்திராணி(78) என்ற தம்பதி காலையிலே தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தனர்.
இதுகுறித்து சிவசங்கரன் கூறுகையில்,” 22 தேர்தல்களில் தனது வாக்கை பதிவு செய்துள்ளேன். இதுவரை எந்த தேர்தலிலும் வாக்களிக்க தவறவில்லை.இளைஞர்கள் கண்டிப்பாக ஓட்டுப்போட வேண்டும். ஜனநாயக உரிமையை காப்பது வாக்குதான். இதனை யாரும்தவிர்க்கக் கூடாது. நல்லதோ கெட்டதோ நாம் ஓட்டுப்போட வேண்டும்” என்று கூறினார்.
கோவை நல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி சாமி(95). வயது மூப்பின் காரணமாக நடக்க முடியாத நிலையிலும் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக அந்தோணிசாமி இன்று காலையிலேயே நல்லாம்பாளையம் அரசு பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு வீல் சேரில் வந்து தனது வாக்கை பதிவு செய்துவிட்டு சென்றார்.
தர்மபுரி மாவட்டம், காந்திநகர் விஜய்வித்யாலயா பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் 101 வயது மூதாட்டி ஒருவர் சக்கர நாற்காலியில் வந்து தனது வாக்கினை பதிவு செய்தார்.
ராமேஸ்வரம் 16வது வார்டில் வாக்களிக்க இளைஞர் ஒருவர் நடக்க இயலாத வயதான மூதாட்டியை வாக்குச்சாவடிக்கு தூக்கிச்சென்று வாக்கு செலுத்த உதவினார்.
இதுபோன்று பல்வேறு இடங்களில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.
**-வினிதா**