முதல்வரின் உத்தரவின் அடிப்படையில் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் குறைந்துள்ள நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இன்னும் பள்ளி கல்லூரிகளுக்கு மட்டுமே நேரடி வகுப்புகள் தொடங்கப்படவில்லை. முன்னதாக புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியான நிலையில் அதன் அடிப்படையில் தமிழகத்திலும் பள்ளிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்தது.
ஆனால் மூன்றாம் அலை ஏற்படலாம் என்ற அச்சத்தின் காரணமாகப் பள்ளிகள் திறப்பது தொடர்பான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்த சூழலில் முதல்வர் என்ன சொல்கிறாரோ அதன் அடிப்படையில் பள்ளிகள் திறப்பு விவகாரத்தில் முடிவெடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
தஞ்சாவூர் அருகே கள்ளபெரம்பூர் பகுதியில் உள்ள ஏரியில் தூர் வாரும் பணியை இன்று காலை பார்வையிட்ட அவர், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது 9 முதல் 12 ஆம் வகுப்புகள் வரையிலான மாணவர்களுக்காக வகுப்புகள் திறப்பது குறித்து ஏற்கனவே துறை ரீதியாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மூன்றாம் அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவர் எனக் கூறப்படுகிறது.
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் போது எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதோ, அதே அளவுக்குப் பள்ளிகள் திறப்பதிலும் முக்கியத்துவம் அளிக்க வேண்டிய கட்டாய நிலை உள்ளது. மருத்துவ குழுவினருடன் ஆலோசனை செய்து, முதல்வர் என்ன சொல்கிறாரோ அதன் அடிப்படையில் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும்.
பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக ஆலோசனை நடந்து வருகிறது. பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு பணிநிரவல் செய்யப்பட்ட பிறகுதான் எங்கெங்கு காலி பணியிடங்கள் உள்ள விபரம் தெரியவரும். அதன் அடிப்படையில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்.
தனியார் பள்ளிகளைப் போல அரசுப் பள்ளிகளை மேம்படுத்த இரண்டு ஆண்டுகளில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் ”என்றார்.
**-பிரியா**
�,