கர்நாடக ஹிஜாப் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஹிஜாப் விவகாரம் ஒவ்வொரு நாளும் புதிய வடிவம் பெற்று பெரிதாகி கொண்டே செல்கிறது. இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் ஒரே சீருடை திட்டத்தை எதிர்த்தும், ஹிஜாப் அணிய அனுமதி வழங்கக் கோரியும் ஐந்து மாணவிகள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்து வந்த தனி நீதிபதி கிருஷ்ண தீட்சித், இந்த வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி நேற்று உத்தரவிட்டார்.
இந்த நிலையில் மூத்த வழக்கறிஞரான கபில் சிபல் இன்று(பிப்ரவரி 10) உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்தார். அதில், “ஹிஜாப் விவகாரம் நாடு முழுவதும் பரவியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் கல்லெறி சம்பவங்கள் நடைபெறுகின்றன. கர்நாடக மாநில உயர்நீதிமன்றத்தில் உள்ள ஹிஜாப் தொடர்பான வழக்குகளை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும். இந்த மனுவை அவசர விசாரணைக்கு ஏற்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
அப்போது “ஹிஜாப் வழக்கை இங்கே மாற்ற விரும்புகிறீர்களா” என்று தலைமை நீதிபதி, வழக்கறிஞர் கபில் சிபலிடம் கேட்டார்.
அதற்கு, அவர், “ ஆம் இதுதொடர்பாக இன்று மனுதாக்கல் செய்துள்ளோம்” என்று கூறினார்.
”வேண்டாம், இதுகுறித்து உயர் நீதிமன்றம் முடிவு செய்யட்டும். ஒரிரு நாட்கள் காத்திருப்போம்” என்று தலைமை நீதிபதி கூற,
“இந்தவழக்கை விசாரணைக்கு தயவு செய்து பட்டியலிட வேண்டும். தற்போதைக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்க வேண்டாம்” என்று வழக்கறிஞர் கூறினார்.
“இதில் பிரச்சனை என்னவென்றால், நாம் இப்போது பட்டியலிட்டால், உயர் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்காது” என்று தலைமை நீதிபதி கூறினார்.
“அப்படி இல்லை, இந்த வழக்கை நீங்கள் விசாரித்தாலும், உயர் நீதிமன்ற விசாரணைக்கு எந்த தடையும் இல்லை என்று நீங்கள் சொல்லலாம். ஏனெனில், தற்போது இந்த பிரச்சினை நாடு முழுவதும் பரவியுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன” என்று வழக்கறிஞர் கூறினார்.
”இதுகுறித்து உயர் நீதிமன்றம் விசாரிக்கட்டும். அவர்களுக்கு நேரம் கொடுப்போம். நேற்று உயர் நீதிமன்றம் விசாரணையை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றியது. இன்று நீங்கள் இந்த வழக்கை உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற கோரிக்கை வைக்கிறீர்கள். இது நன்றாக இல்லை” என்று தலைமை நீதிபதி கூறினார்.
“தயவு செய்து வழக்கை விசாரணைக்கு மட்டும் பட்டியலிடுங்கள். உத்தரவு எதுவும் பிறப்பிக்க வேண்டாம்” என்று மீண்டும் வழக்கறிஞர் கூறினார்.
இதை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி “இந்த வழக்கை இன்று பிற்பகல் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கவுள்ளது. அதனால், தற்போது உச்ச நீதிமன்றம் தலையீடுவது நன்றாக இருக்காது” என்று கூறிவிட்டார்.
**-வினிதா**