ஒருகாலத்தில் தமிழ் சினிமாவிலும் தெலுங்கு சினிமாவிலும் ஆக்ஷன் குயின் ஆக விளங்கிய விஜயசாந்தி நேற்று பிப்ரவரி 2 சென்னையில் அதிமுகவின் பொதுச் செயலாளர் என உரிமை கோரும் சசிகலாவைச் சந்தித்திருக்கிறார்.
விஜயசாந்தி இப்போது நடிகை மட்டுமல்ல… பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் என்பதால் இந்தச் சந்திப்புக்கு அரசியல் சாயம் அதிகமாகவே பூசப்படுகிறது.
தஞ்சை மாவட்டத்தில் மைக்கேல் பட்டி என்ற ஊரில் உள்ள கிறிஸ்துவப் பள்ளியில் மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இது தொடர்பாக பாஜகவின் தேசியத் தலைவர் ஜேபி நட்டா விசாரணைக் குழு ஒன்றை அமைத்தார். அந்தக் குழுவில் தெலுங்கானாவைச் சேர்ந்தவரும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான விஜயசாந்தி இடம்பெற்றிருக்கிறார்.
அந்த விசாரணைக்காக தமிழகம் வந்த விஜயசாந்தி நேற்று சென்னை தி.நகரில் உள்ள சசிகலாவின் இல்லத்தில் அவரை சந்தித்துப் பேசினார். இதுகுறித்து தனது ட்விட்டரில் கருத்து வெளியிட்டுள்ள விஜயசாந்தி, “சின்னம்மா அவர்கள் எனக்கு அம்மா போன்றவர். நான் அவர்களுக்கு மகள் போன்றவள். நல்லது செய்தவர்களுக்கு நல்லது நடக்கும்” என்று தெரிவித்திருக்கிறார்.
சந்திப்பு முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய விஜயசாந்தி… “சென்னை வந்தால் சின்னம்மாவை எப்போதும் சந்திப்பேன். எங்கள் நட்பு எப்போதும் தொடரும். இந்தச் சந்திப்பில் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை. மரியாதை நிமித்தமான சந்திப்புதான்” என்று கூறியுள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவும் பாஜகவும் கூட்டணியை தற்காலிகமாக அறுத்துக் கொண்டு தனித்தனியாகப் போட்டியிடுகின்றன. சில வாரங்களுக்கு முன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆங்கிலப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் சசிகலாவைப் பற்றி குறிப்பிடும்போது அதிமுக ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் விஜயசாந்தியின் சசிகலா உடனான சந்திப்பு தனிப்பட்ட சந்திப்பாக இருந்தாலும் அரசியலில் எதுவும் எப்போதும் நடக்கலாம் என்பதற்கான ஒரு காட்சியாகவும் தெரிகிறது.
**வேந்தன்**
dசசிகலா – விஜயசாந்தி: திடீர் சந்திப்பு!
+1
+1
+1
+1
+1
+1
+1