அதிமுகவில் கடந்த சில நாட்களாக, குறிப்பாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முடிந்ததிலிருந்து சில அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கட்சித் தலைமையை விமர்சித்துப் பேசி வந்த அன்வர் ராஜா கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
அதுபோன்று அதிமுகவின் தற்காலிக அவைத் தலைவராக, தமிழ் மகன் உசேன் நியமிக்கப்பட்டார். [அதிமுகவின் சட்ட விதி 20 (அ) 2 திருத்தியமைக்கப்பட்டு தீர்மானம் கொண்டு வரப்பட்டது](https://minnambalam.com/politics/2021/12/01/39/double-leadership-admk-what-impact-on-sasikala). பொதுச் செயலாளர் என்ற பதவியை மீண்டும் உருவாக்கும் திட்டம் ஏதும் இல்லை என்பதும் இந்தத் தீர்மானத்தின் மூலம் தெரிய வருகிறது.
இந்நிலையில், இன்று (டிசம்பர் 2) அதிமுக பொதுச் செயலாளர் என்ற பெயரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் சசிகலா.
விரைவில் அதிமுக நிலை மாறும், தலை நிமிறும், இது உறுதி என்று தெரிவித்துள்ள சசிகலா, “அதிமுக என்றைக்குமே எளிய தொண்டர்களுக்கான ஒரு இயக்கமாக செயல்பட்டு நாட்டின் மூன்றாவது பெரிய கட்சி என்ற நிலைக்கு சென்றதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால், இன்றைய நிலையைப் பார்க்கும்போது, இதற்காகவா நம் இருபெரும் தலைவர்களும் தங்கள் ரத்தத்தை வியர்வையாக்கி ஓயாது உழைத்து கட்சியை காப்பாற்றினார்கள் என்று நினைத்து பார்க்கையில் ஒவ்வொரு தொண்டனின் நெஞ்சமும் குமுறுகிறது.
என்றைக்கு தனி மனித விருப்பு வெறுப்புகளுக்கு இயக்கம் பயன்பட்டதோ அன்றிலிருந்து அதன் மதிப்பு குறைந்தது, மேலும் தன் தொண்டர்களையும் மறந்தது. இதனால் ஏளன பேச்சுகளும், சிறுமைப்படுத்துவதும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
நம் இயக்கத்தில் எத்தனையோ ஆற்றல்மிகு நிர்வாகிகள், திறமைமிக்க செயல்வீரர்கள், செயல் வீராங்கனைகள், கட்சியை தங்கள் உயிர் மூச்சாக எண்ணி, வாழ்ந்து கொண்டு இருக்கும் தொண்டர்கள் என ஏராளமானோர் இன்றைக்கும் கட்சியின் வளர்ச்சி மட்டுமே தங்கள் வாழ்வின் லட்சியமாக ௧ருதி, கட்சி மீண்டும் அதே பொலிவோடு பழைய நிலைக்கு வர வேண்டும் என்று ஒவ்வொரு நொடியும் எதிர்பார்த்து தங்கள் வாழ்க்கையை நம்பிக்கையோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
உங்கள் நம்பிக்கை கண்டிப்பாக வீண் போகாது. நீங்கள் அனைவரும் சோர்ந்து போகாமல் தைரியமாக இருங்கள். ஒரு சிலருடைய தேவைகளுக்காகவும் விருப்பு வெறுப்புகளுக்காகவும் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்ற நம் இயக்கத்தை, சரி செய்து, மீண்டும் அதைத் தொண்டர்களுக்கான ஒரு இயக்கமாகவும், நம் தலைவர்கள் வகுத்த சட்ட திட்டங்களை, அவர்கள் முன்னெடுத்துச் சென்ற அதே பாதையில், பிறழாமல் நம் இயக்கத்தைக் கொண்டு செல்ல, அரசியல் எதிரிகளின் கனவுகளையெல்லாம் தகர்த்து, அவர்களுக்கு ஒரு சிம்ம சொப்பனமாக நம் இயக்கம் வெளிப்படவும், ஒவ்வொரு தொண்டனும் அதிமுகவைச் சேர்ந்தவர் என்று பெருமையோடும், மிடுக்கோடும், கர்வத்தோடும் தன்னை இந்த சமூகத்தில் சொல்லிக் கொள்ளும் வகையில் நம் இயக்கத்தை விரைவில் மாற்றிக் காட்டுவோம். அனைத்து கட்சி அடிமட்ட தொண்டர்களும் சந்தோசமாக, கவலையின்றி இருங்கள் உங்களுடன் தோளோடு தோள் கொடுத்து உங்களுக்காக உழைக்க வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்.
அண்மைக்காலமாக எந்தவித காரணமும் இல்லாமல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக உதாசீனப்படுத்தப்பட்டவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள் மற்றும் தாங்களாக ஒதுங்கிக் கொண்டு செயல்படாமல் இருப்பவர்கள் அனைவரும் கவலைப்படாமல் சிறிது காலம் பொறுத்து இருங்கள். அதிமுக நிலை மாறும்.
உண்மைகளும், நியாயங்களும் என்றைக்கும் தோற்றதாகச் சரித்திரம் இல்லை. எத்தனை இடர்பாடுகள், சோதனைகள் ஏற்பட்டாலும் அவற்றையெல்லாம் தகர்த்தெறிந்து என் உயிர்மூச்சு உள்ளவரை நம் இயக்கத்தைக் காத்து, தொண்டர்களின் இயக்கமாக மாற்றும் வரை நான் உழைத்துக் கொண்டே இருப்பேன், ஓய்ந்து விடமாட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
**-பிரியா**
�,