சசிகலா விடுதலை: பால் காய்ச்ச தயாராகும் கார்டன் பங்களா!

Published On:

| By Balaji

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்துவரும் சசிகலா, வரும் ஜனவரி 27 ஆம் தேதி விடுதலை செய்யப்படுகிறார். சிறையில் இருந்து நிர்வாக நடைமுறைகள் முடிந்து அவர் வெளியே வருவதற்கு அன்று பகல் ஆகிவிடுமென்றும் அதையடுத்து ஓசூர் வர மாலை ஆகிவிடும் என்றும் ஏற்கனவே அமமுக வட்டாரத்தில் தெரிவித்திருந்தார்கள்.

இதைக் கருத்தில் கொண்டு தமிழக கர்நாடக எல்லையான ஓசூரில் சசிகலா அன்றுஇரவு தங்கிவிட்டு மறுநாள்தான் சென்னை வருவார் என்று எதிர்பார்த்திருந்தனர். அதற்காக ஓசூரில் இரு வீடுகளும் பார்க்கப்பட்டு அதை அமமுக நிர்வாகிகள் சென்று பார்வையிட்டிருந்தனர்.

இந்நிலையில் சிறை வட்டாரத்தில் இருந்து கிடைத்திருக்கும் தகவல்களின்படி,” ஜனவரி 27 ஆம் தேதி காலை 9.30 மணிக்கெல்லாம் சசிகலா விடுதலை செய்யப்பட்டுவிடுவார். அவரது விடுதலை தொடர்பான கோப்புகள் முதல் நாளே தயாரிக்கப்படும். அன்று காலை சிறை அலுவலகம் திறந்ததுமே உடனடியாக சசிகலா விடுவிக்கப்படுவார்”என்கிறார்கள்.

சசிகலா விடுதலையை ஒட்டி சென்னை போயஸ் கார்டனில் ஜெயலலிதாவின் வேதா இல்லத்துக்கு எதிரே கட்டப்பட்டிருக்கும் புதிய இல்லத்தில் கிரகபிரவேசம் செய்வதற்கான ஏற்பாடுகளும் ஜரூராக நடந்து வருகின்றன. சசிகலா வருவதற்கு இரு நாட்கள் முன்னதாக அந்த போயஸ் கார்டன் பிரம்மாண்ட பங்களாவில் ஜனவரி 25 ஆம் தேதி பால் காய்ச்சி கிரகப் பிரவேசம் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

இது தொடர்பாக கடந்த அக்டோபர் 22 ஆம் தேதியே மின்னம்பலத்தில், [போயஸ் கார்டன் புதிய பங்களா: தை மாதம் பால் காய்ச்சும் சசிகலா]( https://minnambalam.com/politics/2020/10/22/12/ssikala-new-poes-garden-bunglaw-january) என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

அச்செய்தியில், “போயஸ் கார்டனில், சசிகலாவுக்காக புதிய இல்லம் கட்டும் கட்டுமானப் பணிகள் , கடந்த ஆண்டே தொடங்கிவிட்டன. அந்த வேலைகளை டிடிவி தினகரன் கவனித்து வருகிறார்.இந்நிலையில் சமீபத்தில் சசிகலா சொத்துக்களை வருமான வரித்துறையினர் முடக்கம் செய்ததில் போயஸ் கார்டனில் புதியதாக கட்டப்பட்டு வரும் பங்களாவும் அடக்கம். கட்டுமான வேலைகள் நடந்துகொண்டிருந்த அந்த பங்களா வாசலில் முடக்கத்துக்கான அறிவிப்பை ஒட்டிவிட்டுப் போனார்கள் வருமான வரித்துறை அதிகாரிகள்.

இது தொடர்பாக வழக்கறிஞர்களுடன் ஆலோசனைகள் செய்தார் தினகரன். முடக்கம் செய்யப்பட்ட சொத்துக்களை விற்கமுடியாது, வாங்க முடியாது. ஆனால் சட்ட ரீதியாக முடக்கத்தை நீக்கும் வரையில் அந்த சொத்துக்களை அனுபவித்து வரலாம். கட்டுமான பணிகளைச் செய்யலாம் என்று சொல்லப்பட்ட நிலையில்தான், போயஸ் கார்டனில் கட்டப்பட்டுவரும் கட்டுமான பணிகள் வேகமெடுத்தது. கடந்த அக்டோபர் மாதமே ஒப்பந்ததாரரைத் தொடர்புகொண்ட தினகரன் இன்னும் இரு மாதங்களுக்குள் அனைத்து பணிகளையும் முழுமையாக முடித்துவிட்டு ஒப்படைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அப்படியென்றால் தை மாதத்தில் சசிகலா போயஸ் கார்டனின் புதிய பங்களாவில் பால் காய்ச்சலாம் என்று சொல்கிறார்கள்”எனக் குறிப்பிட்டிருந்தோம்.

அதன்படியே இப்போது தை மாதம் ஜனவரி 25 ஆம் தேதி சசிகலாவுக்கான புதிய இல்லத்தில் பால் காய்ச்சும் திருவிழா நடக்கிறது. சசிகலா வந்த பிறகு அந்த வீட்டில் பாலிடிக்ஸும் காய்ச்சப்படும் என்று தெரிகிறது.

**-வேந்தன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share