டாஸ்மாக் பணியாளர்களுக்கு 500 ரூபாய் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஏப்ரல் 26) மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
அப்போது தாக்கல் செய்யப்பட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில், “ஆயத்தீர்வை வருவாய் மற்றும் விற்பனை வரி ஆகியவை மூலம் டாஸ்மாக் நிறுவனத்திற்கு வருவாய் கிடைக்கிறது. 2003-04 ஆண்டுகளில் டாஸ்மாக் மூலம் 3639.93 கோடி ரூபாய் வருவாய் கிடைத்த நிலையில் 19 ஆண்டுகளில் இந்த வருவாய் 36 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது.
அதன்படி 2020-21 ஆம் ஆண்டில் 33,811 கோடிக்கு விற்பனையான நிலையில் 2021-2022 ஆம் ஆண்டில் மார்ச் வரை ரூ.36,013 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு மாதம் 500 ரூபாய் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் 6215 மேற்பார்வையாளர்கள் 15,000 விற்பனையாளர்கள், 3900 உதவி விற்பனையாளர்கள் என மொத்தம் 24,800க்கும் அதிகமான பணியாளர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களுக்கு 2022 ஏப்ரல் மாதம் முதல் 500 ரூபாய் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றும் இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு 16.67 கோடி ரூபாய் கூடுதலாகச் செலவாகும் என்றும் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
**-பிரியா**