ஒகேனக்கல் இரண்டாவது குடிநீர் திட்டம்: கர்நாடகாவுக்கு துரைமுருகன் பதில்!

Published On:

| By Balaji

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்துக்குக் கர்நாடகா எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் அதற்குத் தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்துள்ளார்.

கடந்த ஜனவரி 20ஆம் தேதி தலைமைச் செயலகத்திலிருந்தவாறு தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின். அப்போது அவர் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் இரண்டாம்கட்ட பணிகள் 4,600 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது என்று கூறினார்.

இதற்கு கர்நாடகா நீர்வளத் துறை அமைச்சர் கோவிந்த் கார்ஜோள், கர்நாடக – தமிழக எல்லையான ஒகேனக்கலில் தமிழக அரசு தன்னிச்சையாக இத்தகைய பணிகளை மேற்கொள்ள முடியாது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி தமிழக அரசு செயல்பட வேண்டும்.

உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பில் குறிப்பிட்ட அளவு நீரையே கர்நாடகா தமிழகத்துக்குத் திறந்து விடும். இத்திட்டத்துக்காகக் கூடுதல் நீர் திறந்துவிடப்படாது.

ஒருதலைபட்சமான இந்தத் திட்டத்தை கர்நாடக அரசு எதிர்க்கும். சட்டரீதியாக நீதிமன்றத்தில் முறையீடு செய்யும் என்று தெரிவித்திருந்தார். இதற்குத் தர்மபுரி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதுபோன்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், தர்மபுரி, கிருஷ்ணகிரி மக்களை பாதுகாக்க இரண்டாம்கட்ட ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்துவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று கூற கர்நாடக அரசுக்கு உரிமையில்லை” என்று கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்தச் சூழலில் தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், ஒகேனக்கல் இரண்டாவது குடிநீர் திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஒகேனக்கல் இரண்டாவது குடிநீர் திட்டத்தைச் செயல்பட விடமாட்டோம் என்று கர்நாடக அமைச்சர் ஓர் அறிவிப்பைச் செய்திருக்கிறார். குடிநீர்த் தேவைக்குத் தண்ணீர் தர மாட்டோம் என்று சொல்வது எந்தவிதமான மனிதாபிமானம் என்று தெரியவில்லை. மனிதாபிமான அடிப்படையிலும் சரி சட்டபூர்வமான அடிப்படையிலும் சரி… தமிழகத்துக்கு ஒகேனக்கல் இரண்டாவது குடிநீர் திட்டத்தை ஆரம்பிக்கின்ற உரிமை உண்டு.

காவிரி நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பை வழங்குகிறபோது, முதலில் காவிரி பாயும் மாநிலங்களில் ஒவ்வொரு மாநிலமும் காவிரி பாசனப் பகுதி எவ்வளவு என்று கணக்கிட்டு அதற்குரிய விகிதாச்சார அடிப்படையில் தண்ணீரைப் பகிர்ந்தளித்தார்கள். இது கர்நாடக அமைச்சருக்கு நினைவிருக்கும் என்று கருதுகிறேன்.

காவிரி நதிநீர் ஆணையம் 5.2.2007 அன்று அளித்த இறுதித் தீர்ப்பில் நிகர குடிநீர் தேவைக்காக (Consumptive Use) 2.2 டிஎம்சி நீர் ஒதுக்கியுள்ளது.

அதாவது, சுமார் 11 டிஎம்சி காவிரி நீரிலிருந்து குடிநீருக்காக எடுத்துக் கொள்ள அனுமதி அளித்துள்ளது. இப்படி, அனைத்துப் பங்களிப்பும் முடிந்த பிறகும் எஞ்சிய நீர்ப்பங்கீட்டின் கீழ் (Balance Water After Considering The Permitted irrigation Scheme) 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி நமக்கு கிடைத்தது 25.71 டிஎம்சி.

16.2.2018 அன்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் மூலம், காவிரி நதிநீர் ஆணையத்தின் இறுதித் தீர்ப்பை உறுதி செய்திருக்கிறது. மேலும், இந்திய மற்றும் தமிழகத்தின் நீர்வளக் கொள்கைகளின்படி குடிநீர் தேவைக்குத்தான் முதலிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இறுதித் தீர்ப்பு Clause 18-ன்படி இம்மாதிரியான அத்தியாவசிய தேவைகளுக்கு நீரை உபயோகப்படுத்திக் கொள்ள உரிமை கொடுக்கப்பட்டுள்ளது.

ஆக, எப்படிப் பார்த்தாலும், காவிரி-ஒகேனக்கல் இரண்டாவது குடிநீர் திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும். இறுதியாக ஒன்று, வீட்டுப் பயன்பாடு, உள்ளாட்சிப் பயன்பாட்டு விநியோகம், தொழில்சார் விநியோகம் என்பன போன்ற காரணங்களுக்காக ஒரு மாநிலத்தால் எந்தவொரு நீர்த் தேக்கத்திலிருந்து நீர் திருப்பிவிடப்பட்டாலும், அது அந்த நீராண்டல் சம்பந்தப்பட்ட மாநிலத்தின் பயன்பாட்டுக் கணக்கில்தான் சேர்க்கப்படும் என்பது காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் முடிவாகும்” என்று பதிலடி கொடுத்துள்ளார்.

**-பிரியா**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share