இந்தியா முன்னேற்றப் பாதையில் சென்று உலகளவில் சரியான இடத்தைப் பிடிக்கும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
நாட்டின் 73ஆவது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள் என்று தெரிவித்த அவர், இரு நாட்களுக்கு முன்பு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125ஆவது பிறந்ததினத்தை நாம் கொண்டாடினோம். இவர்தான் ‘ஜெய்-ஹிந்த்’ என்ற உற்சாகமான வணக்கத்தைப் பின்பற்றியவர். சுதந்திரத்துக்கான இவரது தாகம், இந்தியாவைக் கவுரமான நாடாக்க இவர் மேற்கொண்ட லட்சியம் நம் அனைவரையும் ஊக்குவிக்கிறது.
அரசியல் சாசனத்தை உருவாக்கிய அரசியல் சாசன அவையில், சிறந்த சிந்தனை வாதிகள் இடம் பெற்றிருந்தது நமது பாக்கியம். அவர்கள் நமது சுதந்திரப் போராட்டத்துக்கு வழிகாட்டியவர்கள். நீண்ட ஆண்டுகளுக்குப் பின்பு, இந்தியாவின் ஆன்மா மீண்டும் விழித்தெழுந்தது. இந்த விதிவிலக்கான ஆண்களும், பெண்களும், புதிய விடியலின் முன்னோடிகளாக இருந்தனர். அவர்கள், மக்கள் சார்பில், ஒவ்வொரு சட்டத்தின் அம்சங்களையும் விவாதித்தனர். இந்த ஆய்வு 3 ஆண்டுகள் வரை நடந்தது. இறுதியில், டாக்டர் அம்பேத்கர்தான், வரைவு குழுவின் தலைவராக, அரசியல் சாசனத்தின் இறுதி பதிப்பைத் தயாரித்தார்.
அரசின் செயல்பாட்டு விவரங்கள் அடங்கிய அரசியல் சாசன உரை நீளமானது. இதன் முன்னுரை வழிகாட்டி விதிமுறைகளைச் சுருக்கமாகக் கூறுகிறது – ஜனநாயகம், நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம். இவை அடித்தளத்தை அமைக்கின்றன. இதில்தான் நமது குடியரசு நிற்கிறது. இவையே நமது கூட்டுப் பாரம்பரியத்தை உருவாக்கும் மதிப்புகள்.
குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் அடிப்படைக் கடமைகள் என்ற வடிவில் இந்த மதிப்புகள் நமது அரசியல் சாசனத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளன. உரிமைகளும் மற்றும் கடமைகளும், ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்.
அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படைக் கடமைகளை மக்கள் கடைப்பிடிப்பது அடிப்படை உரிமைகளை அனுபவிப்பதற்கான சரியான சூழலை உருவாக்குகிறது. தேசிய சேவைகளுக்கு அழைப்பு விடுக்கும்போது, அதை நிறைவேற்றுவது அடிப்படை கடமை. அதனால், கோடிக்கணக்கான மக்கள், தூய்மை இந்தியா திட்டத்தையும், கொரோனா தடுப்பூசி திட்டத்தையும் மக்கள் இயக்கமாக மாற்றினர். இதுபோன்ற பிரச்சாரங்களின் வெற்றிக்கான பெருமை நமது மக்களைச் சார்ந்தது. நாட்டு நலன் குறித்த இந்த பிரச்சாரத்தை, தங்களின் தீவிர பங்களிப்பு மூலம் நமது மக்கள் தொடர்ந்து வலுப்படுத்துவர் என்பது உறுதி” என்று குறிப்பிட்டார்.
மேலும் அவர், இப்போது உள்ளது போல், உலகத்துக்கு இவ்வளவு உதவி தேவைப்பட்டதில்லை. கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக, கொரோனாவுடன் மனித இனம் போராடி வருகிறது. லட்சக்கணக்கான உயிர்களை இழந்துவிட்டோம், உலக பொருளாதாரமே பாதிப்படைந்துள்ளது. இது மனித இனத்துக்கு அசாதாரண சவாலாக உள்ளது.
வளரும் பொருளாதார நாடாக, கண்ணுக்குத் தெரியாத எதிரியை எதிர்த்து போராடும் அளவுக்கு வளங்கள் மற்றும் கட்டமைப்புகள் நம்மிடம் இல்லை. ஆனாலும், இதுபோன்ற சிக்கலான நேரத்தில், நாட்டின் மீட்பு நடவடிக்கை வெற்றிகரமாக இருந்தது. கொரோனாவுக்கு எதிராக ஈடு இணையற்ற உறுதியை நாம் வெளிப்படுத்தினோம் என கூறுவதில் நான் பெருமையடைகிறேன்.
முதல் ஆண்டிலேயே, சுகாதார கட்டமைப்பை நாம் அதிகரித்தோம், பிறருக்கும் உதவினோம். இரண்டாம் ஆண்டில் உள்நாட்டில் தடுப்பூசியை உருவாக்கி, உலகின் மிகப் பெரிய தடுப்பூசி நடவடிக்கையை தொடங்கினோம். பிற நாடுகளுக்கும் தடுப்பூசிகளையும், மருந்துகளையும் நாம் வழங்கினோம். இந்தியாவின் இந்த பங்களிப்பைச் சர்வதேச அமைப்புகள் பாராட்டுகின்றன.
சில பின்னடைவுகள் இருக்கலாம். இந்த தொற்று மாறுபட்ட புதிய வகைகளுடன் திரும்ப வந்து விட்டது. இந்த தொற்று வேகமாகப் பரவுவதால், நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
இந்தியா பழங்கால நாகரிக நாடு ஆனால், இளமையான குடியரசு நாடு. நமக்கு, நாட்டை மேம்படுத்துவது தொடர்ச்சியான முயற்சி. குடும்ப அளவிலும், நாடளவிலும், அடுத்த தலைமுறையின் சிறப்பான எதிர்காலத்துத்தை உறுதி செய்வதற்காக ஒரு தலைமுறை கடினமாக உழைக்கிறது. நாம் சுதந்திரம் பெற்றபோது, காலனி ஆட்சி நம்மை ஏழ்மையில் விட்டுச் சென்றது. ஆனால் 75 ஆண்டுகளில் நாம் நல்ல முன்னேற்றத்தைக் கண்டுள்ளோம். நமது நாடு தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் சென்று உலகளவில் சரியான இடத்தைப் பிடிக்கும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்” என்று உரையாற்றினார்.
**-பிரியா**
�,