பதிவுத்துறை அலுவலகங்களில் பதிவு அலுவலர்கள் இனி உயரமாக அல்லாமல் சரி சமமாக அமரும் இருக்கைகளைப் போட வேண்டும் எனப் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி சமீப காலமாகச் சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். சென்னையிலுள்ள பத்திரப்பதிவு துறைத் தலைவர் அலுவலகத்தில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களின் சிசிடிவிகளின் கட்டுப்பாடு அறை உள்ளது. அதனையும் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்வது, பத்திரப்பதிவு அலுவலகங்களில் பணி நேரத்தில் அதிகாரிகள் இருக்கையில் இல்லாதது ஆகியவை குறித்துத் தெரியவந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கனவே எச்சரித்துள்ளார்.
இந்நிலையில் இன்று (ஜூலை 22) மற்றொரு உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அதில், “பதிவுத்துறை அலுவலகங்களில் பதிவு அலுவலர்கள் இனி உயர்ந்த மேடையில் அமராமல் சரி சமமாக அமரும் இருக்கைகள் போட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
“பதிவுத்துறைச் செயலர் மற்றும் பதிவுத்துறைத் தலைவருடன் கோயம்புத்தூர் மற்றும் சேலம் மண்டலங்களில் திடீர் ஆய்வுகள் மேற்கொண்டபோது பதிவு அலுவலர்கள் தங்களது அலுவலகத்தில் உயர்ந்த மேடையில் அமர்ந்து பதிவு பணி செய்து வருவதால், பொதுமக்களை மரியாதையுடன் நடத்தி அவர்களுக்குப் பதிவு சேவையினை வழங்குவது சிரமமாக உள்ளது கண்டறியப்பட்டது.
எனவே, இனிவரும் காலங்களில் பதிவு அலுவலர்கள் உயர்ந்த மேடையில் அமராமல் சரிசமமாக அமர்ந்து பதிவு பணியினை செய்ய வேண்டும் .
சார்பதிவாளர் அலுவலகங்களில் அனைத்து சேவைகளும் கணினி மயமாக்கப்பட்ட நிலையிலும் அரசுக்குச் செலுத்தும் கட்டணங்கள் யாவும் இணைய வழியாகவே செலுத்தப்படுவதால் சார்பதிவாளர் பணத்தைக் கையாள அவசியமில்லாத நிலையிலும் இந்த உயர் மேடைகள் தற்போது தேவையில்லை என்பதால் பதிவு அலுவலர்களின் இருக்கையினைச் சமதளத்தில் அமைத்துச் சுற்றியுள்ள தடுப்புகள் உடனடியாக நீக்கப்பட வேண்டும்” என்று பதிவு அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் அமைச்சர் மூர்த்தி.
**-பிரியா**
�,”