திருமண மண்டப சொத்து வரி விவகாரம் தொடர்பாக ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்துக்கு சொந்தமான கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு ஏப்ரல்-செப்டம்பர் மாதத்திற்கு ரூ.6.50 லட்சம் சொத்து வரி விதித்து சென்னை மாநகராட்சி கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியது. இந்த சொத்து வரி தொடர்பாக ரஜினிகாந்த் தரப்பிலிருந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், சொத்துவரி நோட்டீஸுக்கு தடை விதிக்க வலியுறுத்தப்பட்டது.
இவ்வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கால அவகாசம் அளிக்காமல் நோட்டீஸ் அனுப்பிய அடுத்த 10 நாட்களில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது ஏன் எனக் கேள்வி எழுப்பினார். இதுபோன்ற வழக்குகளால் நீதிமன்ற நேரத்தை வீணடிப்பதாக கண்டனம் தெரிவித்த நீதிபதி, அதிக அபராதத்துடன் வழக்கை தள்ளுபடி செய்யப்போவதாக எச்சரித்தார். இதனால் அபராதம் வேண்டாம் எனக் கூறி வழக்கை வாபஸ் பெற்றது ரஜினிகாந்த் தரப்பு. இதனை முன்வைத்து சமூக வலைதளங்களில் ரஜினி மீது விமர்சனங்கள் எழுப்பப்பட்டது.
ராகவேந்திரா மண்டப சொத்து வரி…
நாம் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும்.
தவறைத் தவிர்த்திருக்கலாம்.#அனுபவமே_பாடம்
— Rajinikanth (@rajinikanth) October 15, 2020
இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் இன்று (அக்டோபர் 15) தனது ட்விட்டர் பக்கத்தில், “ராகவேந்திரா மண்டப சொத்து வரி…நாம் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். தவறைத் தவிர்த்திருக்கலாம். அனுபவமே_பாடம்” என்று பதிலளித்துள்ளார்.
*எழில்*�,”