ரஜினி அரசியலுக்கு மீண்டும் வருவார்: களத்தில் தமிழருவி

Published On:

| By Balaji

ரஜினி இப்போதைக்கு அரசியலுக்கு வரவில்லை என்றுதான் சொல்லியிருக்கிறாரே தவிர, எப்போதும் அரசியலுக்கு வர மாட்டேன் என்று சொல்லவில்லையே என்று காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் 29 ஆம் தேதி, அரசியலுக்கு வரப் போவதில்லை என்று தனது முடிவை தீர்க்கமாக ரஜினி அறிவித்தார். அதனால் விரக்தியான தமிழருவி மணியன் ரஜினி பெயரைக குறிப்பிடாமலேயே தானும் அரசியலில் இருந்து விலகுவதாகவும் இனி செத்தாலும் அரசியல் பக்கம் வரமாட்டேன் என்றும் அறிக்கை விட்டார்.

ஆனால், பிரசவ வைராக்கியம் போல தமிழருவி மணியன் மீண்டும் அரசியல் பேசவும், அரசியல் செய்யவும் ஆரம்பித்துவிட்டார். இன்று (பிப்ரவரி 2) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ரஜினியின் அறிக்கைக்கு புது அர்த்தம் கற்பித்துள்ளார்.

“காந்திய மக்கள் இயக்கத்தில் ரஜினி மக்கள் மன்றத்தைச் சார்ந்த பலர் இணைந்து பணியாற்ற விரும்பி என்னுடன் தொடர்பு கொள்கின்றனர். ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்களுக்கு அன்புடன் ஒன்றை உணர்த்த விரும்புகிறேன்.

நீங்கள் அனைவரும் ரஜினி ஒரு நாள் அரசியல் களத்தில் அடியெடுத்து வைப்பார் என்ற எதிர்பார்ப்பிலும், முதல்வர் பதவியில் என்றாவது அமர்வார் என்ற கனவிலும் அவருடைய ரசிகர்களாக மாறவில்லை. அவருடைய இயல்பான நடிப்பு, செயற்கைப் பூச்சு இல்லாத பேச்சு, ஆணவத்திற்குச் சற்றும் இடம் தராத அடக்கம், உள்ளத்தில் பட்டதை ஒளிவு மறைவின்றி உரைக்கும் நேர்மை, மிகச் சாதாரண மனிதனாகத் தன்னைப் பாவிக்கும் பண்பு நலன், அனைவரும் வியந்து பார்க்கும் ஆடம்பரமற்ற எளிமை, அன்பு சார்ந்து ஒவ்வொருவரிடமும் பழகும் உயர்குணம் ஆகியவற்றில் உங்கள் மனதைப் பறிகொடுத்துத்தான் நீங்கள் அனைவரும் அவருடைய ரசிகர்களாக மாறினீர்கள் என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. அவருக்காக எதையும் இழக்கத் துணியும் உங்கள் உயரிய அர்ப்பணிப்பைக் கடந்த நான்காண்டுகள் நேரில் கண்டு நான் நெஞ்சம் நெகிழ்ந்திருக்கிறேன்.

பாழ்பட்ட அரசியலைப் பழுது பார்க்கவே ரஜினி அரசியல் உலகில் அடியெடுத்து வைக்க முயன்றார். காலச்சூழல் அவருடைய கனவை நனவாக்க இடம் தராத நிலையில் இப்போது அவர் கட்சி தொடங்குவதைத் தவிர்த்திருக்கிறார். நான் எப்போதும் அரசியலில் அடியெடுத்து வைக்கப்போவதில்லை என்று அவர் அறிவிக்கவில்லை. ரஜினி மக்கள் மன்றத்தை அவர் கலைத்துவிடவுமில்லை.

இந்த நிலையில் அவருடைய கூற்றின்படி சிஸ்டத்தைச் சீரழித்தவர்களிடமே சில ரசிகர்கள் சரண் அடைந்திருப்பதையும்,சிலர் இளைப்பாறும் வேடந்தாங்கல் எதுவாக இருக்க முடியும் என்று அலைபாய்வதையும் கண்டு நான் வருந்துகிறேன். ரஜினி

மக்கள் மன்றத்திலிருந்து ஆள் பிடிக்கும் அநாகரிக அரசியலை நான் அடியோடு வெறுக்கிறேன். காந்திய மக்கள் இயக்கம் இந்த சந்தர்ப்பவாத செயலில் மறந்தும் ஈடுபடாது என்று உறுதிபட அறிவிக்கிறேன்”என்றும் குறிப்பிட்டுள்ளார்.

“காந்திய மக்கள் இயக்கம், ரஜினி மக்கள் மன்றத்தின் சகோதர அமைப்பாகத் தொடர்ந்து செயற்படும். அவரவர் இடத்தில் இருந்தபடி கரங்கள் இணந்து காரியமாற்றுவோம். மார்ச் 7-ம் நாள் திருப்பூரில் பொதுக்குழு கூடவிருக்கிறது. நாளையே ரஜினி அரசியலுக்கு வந்தாலும் காந்திய மக்கள் இயக்கம் அவருடன் சேர்ந்தே பயணிக்கும். அவர் அரசியலுக்கு வந்தாலும், வராமல் விலகி இருந்தாலும் பக்திபூர்வமாக அவரை நெஞ்சில் நிறுத்தி நேசிக்கும் எந்த மன்ற உறுப்பினரும் எவர் விரிக்கும் வலையிலும் சிக்கமாட்டார்கள் என்பது மட்டும் உறுதி” இவ்வாறு தமிழருவி மணியன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ரஜினி மக்கள் மன்றத்தினர் தாங்கள் விருப்பப்பட்ட அரசியல் கட்சிகளில் இணைந்து செயலாற்றலாம் என்று ரஜினியே அனுமதி அளித்துவிட்ட நிலையில், தமிழருவி மணியன் இவ்வாறு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

**-வேந்தன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share