இணங்கினார் ஆளுநர்: ராஜஸ்தான் சட்டமன்றம் கூடுகிறது!

Published On:

| By Balaji

ராஜஸ்தான் மாநில சட்டமன்றக் கூட்டத்தைக் கூட்ட ஆளுநர் ஒப்புக் கொண்டதன் மூலம், முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் அவருக்கும் இடையே நடந்த அரசியல் போர் முடிவுக்கு வந்துள்ளது.

சச்சின் பைலட், மற்றும் 18 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு எதிராக செயல்பட்டதால் தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில் ராஜஸ்தான் மாநில சட்டமன்றத்தைக் கூட்டி தனது பெரும்பான்மையை நிரூபிக்க தயாராக இருப்பதாக அறிவித்தார் முதல்வர் கெலாட். அதற்காக மாநில ஆளுநருக்கு சட்டமன்றத்தைக் கூட்டும்படி அமைச்சரவை சார்பில் மூன்றுமுறை முன்மொழிவுகளை அனுப்பினார். ஆனால் அரசியல் அமைப்பில் இதுவரை இல்லாதவாறு அம்மூன்று முன்மொழிவுகளையும் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா திருப்பியனுப்பினார்.

‘மீண்டும் லவ் லட்டர் வந்துள்ளது. அவரோடு ஒரு டீ குடித்துவிட்டு என்னதான் விரும்புகிறார் என்று கேட்டுவிட்டு வந்துவிடுகிறேன்” என்று ஆளுநர் பற்றி ஆவேசமாக கூறிய முதல்வர் கெலாட் நேற்று (ஜூலை 29) ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை சந்தித்தார். இந்த சந்திப்புக்குப் பின்னர் ஆகஸ்டு 14 ஆம் தேதி ராஜஸ்தான் சட்டமன்றத்தைக் கூட்ட ஆளுநர் ஒப்புக் கொண்டிருக்கிறார். இதன் மூலம் முதல் கட்ட வெற்றி அடைந்திருக்கிறார் கெலாட் என்கிறார்கள் காங்கிரசார்.

மாநில அமைச்சரவை அனுப்பிய புதிய திட்டத்தின் அடிப்படையில், ஆகஸ்ட் 14, 2020 முதல் அவையை கூட்டுவதாக ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா தெரிவித்துள்ளார். முன்னதாக நேற்று மாலையில், சட்டமன்றக் கூட்டத்தொடரை அழைப்பதற்கான 21 நாள் அவகாசம் தொடர்பாக மாநில அரசும் ஆளுநரின் உத்தரவுக்கு இணங்கியது. அதன்படி முதல் முன்மொழிவு அனுப்பப்பட்ட ஜூலை 23 ஆம் தேதியில் இருந்து 21 நாட்கள் கணக்கிட்டு ஆகஸ்டு 14 ஆம் தேதி அவையை கூட்ட ஒரு புதிய முன்மொழிவை அமைச்சரவை அனுப்பியது ஆளுநர் அதை ஏற்றுக் கொண்டார்.

ஆகஸ்டு 14 ஆம் தேதி ராஜஸ்தான் சட்டமன்றம் கூடுவது உறுதியாகிவிட்டதால், சச்சின் பைலட் உள்ளிட்ட 19 அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அடுத்து என்ன செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

**-வேந்தன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share