Pபல ஆயிரம் கோடி:ராகுல் காட்டம்!

Published On:

| By Balaji

கன்னியாகுமரி மக்களவை தொகுதியை மீண்டும் தக்கவைக்க மூன்று நாள் பயணமாக இன்று (பிப்ரவரி 27) தென்மாவட்டங்களில் பிரச்சாரத்தை துவக்கினார் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி .

தமிழகத்தில் தென்மாவட்டங்களில் இன்று, நாளைமற்றும் மாா்ச் 1 ஆகிய 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள தூத்துக்குடிக்கு இன்று காலை 11 மணிக்கு வந்தார் ராகுல் காந்தி. வ.உ.சி சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செய்து அங்கிருந்து வாகனத்தில் வ.உ.சி கல்லூரிக்கு வந்த ராகுல் காந்திக்கு சாலை முழுவதும் பொதுமக்கள் திரண்டு வரவேற்பு அளித்தனர்.

தூத்துக்குடியில் உள்ள வ.உ.சி கல்லூரி கூட்ட அரங்கில் வழக்குரைஞர்களுடன் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது ராகுல், ”இந்திய தேசம் என்பது தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் கொண்ட அமைப்புகள், பஞ்சாயத்துகள், பல அரசியல்சாசன அமைப்புகளால் ஆனது. கடந்த 6 ஆண்டுகளாக இந்த அமைப்புகள் மீது மோடி அரசு திட்டமிட்ட தாக்குதல் நடத்தி வருகிறது. நாட்டின் அரசியல் சாசன அமைப்புகள் அனைத்தையும் பா.ஜ.க, சீரழித்து வருகிறது. நாட்டில் ஜனநாயகம் அழிந்துவிட்டது என்பதை வேதனையுடன் தெரிவிக்கிறேன்” என்றார்.

மேலும் அவர் பேசியதாவது, இந்தியா பல்வேறு மாநிலங்களை உள்ளடக்கியது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு தனித்தன்மை உள்ளது. ஆனால், இன்று மாநிலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. என்மீது எந்த ஊழல் புகாரும் இல்லை. சிபிஐ, அமலாக்கத்துறை மூலம் என்னை அச்சுறுத்த முடியாது. காங்., ஆட்சி செய்யும் மாநிலங்களில் எம்.எல்ஏ.,க்களை பா.ஜ., விலை கொடுத்து வாங்குகிறது. அதிகார பலத்தால் கட்சி மாற வைக்கிறது. பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்துடன் தேர்தலை சந்திக்கிறது. மதச்சார்பின்மையை பா.ஜ., சிதைத்து விட்டது. விவசாயிகள் போராட்டம், குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டம் ஆகியவற்றை ஒடுக்குவதன் மூலம் ஜனநாயகத்தை பாஜக அரசு நெறிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

பின்னா், குரூஸ் பா்னாந்து சிலை முன் பொதுமக்களிடம் பேசும் அவா்,டிவியை ரிமோட் மூலம் மாற்றுவது போல், தமிழக அரசை, மோடி இயக்கி வருகிறார். விரைவில், அந்த ரிமோட்டின் பேட்டரியை மாற்ற வேண்டும் என்றார்.

இன்று, நாளை தூத்துக்குடி நெல்லை தென்காசி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்யும் ராகுல் வரும் மாா்ச் 1ஆம் தேதி கன்னியாகுமரி செல்கிறாா்.

ராகுல்காந்தியின் முக்கிய திட்டமே கன்னியாகுமரி மக்களவை தொகுதியை மீண்டும் கைப்பற்றி வெற்றியை நிலைநாட்டுவதே என்கின்றனர் முக்கிய காங் கூட்டணி அரசியலாளர்கள். கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் எதிர்கட்சியாக இருந்தும் தன் சொந்த நிதியுதவி செய்து பலரையும் வியக்கவைத்தார்.இவரது எதிர்பாராத மரணத்தால் வரும் ஏப் 6இல் இந்த மக்களவை தொகுதிக்கும் இடைதேர்தல் நடைபெறுகிறது.தமிழகத்தில் கிடைத்த ஒரு தொகுதியான கன்னியாகுமரியை பாஜக கடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸிடம் பறிகொடுத்தது.

பறிகொடுத்த தொகுதியை தன்வசப்படுத்த பாஜக கடந்த சில மாதமாகவே தீவிரமாக திட்டம் போட்டு வருகிறது. இதனாலேயே ராகுல்காந்தி சுற்றுப்பயணம் மேற்கொள்ள வந்திருக்கிறார்.

இதோடு மேலும் இருமுறையாவது கன்னியாகுமரி தொகுதியில் சுற்றுப்பயணம் செய்வார் ராகுல். வசந்தகுமார் வாரிசையே மீண்டும் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் வேட்பாளராக நிறுத்தி வெற்றியை எளிதில் பெற காங்கிரஸ் திமுக தீவிர முனைப்பு காட்டிவருகிறது.

**-சக்தி பரமசிவன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share