நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு புதுச்சேரியில் கவிழ்ந்துவிட்ட நிலையில், வெளிமாநிலங்களில் இதுகுறித்து பரபரப்பாக பேசுகிறார்கள். ஆனால் புதுச்சேரியிலோ, “அட போங்க சார். இங்கே அடிக்கடி ஆட்சி கவிழ்வதும், எம்.எல்.ஏ.க்கள் அணி மாறுவதும், தலைவர்கள் தாவுவதும்தான் எங்கள் கலாச்சாரம்” என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்குச் சுதந்திரம் கொடுத்த பிறகு, புதுச்சேரியில் ஜனநாயக முறையில் சட்டசபைத் தேர்தல் நடைபெற்று இந்தியத் தேசிய காங்கிரஸ் கட்சி ஆட்சியை அமைத்து முதன் முதலில் 1963 ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி எட்வர்ட் குபேர் முதல்வர் பதவியேற்றார்.
ஒரு ஆண்டு 54 நாட்கள் பதவியில் இருந்த அவரை மாற்றிவிட்டு, வெங்கடசுப்பா என்பவர் முதல்வர் பதவியேற்று 2 ஆண்டு 228 நாட்கள் ஆட்சி புரிந்தார். அவரையும் முழுமையாக நீடிக்க விடாமல் இறக்கிவிட்டு பரூக் மரைக்காயர் 332 நாட்கள் முதல்வர் பதவி வகித்தார், நான்காவது முதல்வராக மீண்டும் வெங்கடசுப்பா முதல்வர் பதவியேற்று 196 நாட்கள் ஆட்சி நடத்தினார். 1963 ஜூலை 1ந் தேதி முதல் 1968 செப்டம்பர் 18 வரையிலான இந்தியத் தேசிய காங்கிரஸ் ஆட்சியில் நான்கு முதல்வர்கள் பதவி வகித்தார்கள், முதல் கோணல் முற்றிலும் கோணல் போல்தான் இன்று வரையில் அரங்கேறிவருகிறது.
கடந்த 58 ஆண்டுகளில் 2011- 2016ம் ஆண்டு என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் ரங்கசாமி மட்டுமே ஐந்து வருடம் முழுமையாக முதல்வராக இருந்தது புதுச்சேரியின் வரலாறு.
மற்ற 52 வருடங்களில் எந்த ஒரு கட்சியும் ஆட்சி அமைத்து ஐந்து வருடம் முழுமையாக முதல்வராக இருந்ததில்லை. அதில் ஆறுமுறை குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்றுள்ளது.
காரணம் புதுச்சேரியில் உள்ள பெரும்பாலான அரசியல் தலைவர்களுக்கு அதிகார, பதவி மோகம் இருக்கும் அளவுக்குக் கொள்கைப் பிடிப்பும் இல்லை, ஆரோக்கியமானஅரசியலும் இல்லை என்கிறார் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர்.
மூத்த அரசியல்வாதியான சண்முகம் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து காங்கிரஸ் கட்சிக்குப் போனார். பரூக் மரைக்காயர் காங்கிரஸ் கட்சியிலிருந்து திமுகவுக்கு போனார், முதல்வர் பதவியை சில காலம் அனுபவித்தார். மீண்டும் காங்கிரஸ் கட்சிக்குத் திரும்பினார். அன்பழகன் எம்.எல்.ஏ அதிமுக,விலிருந்து திமுகவுக்கு தாவினார். எம்.ஏ.எம்.சுப்பிரமணியன் அதிமுகவிலிருந்து திமுகவுக்கு வந்தார்.
கம்யூனிஸ்ட் (சிபிஐ) எம்.எல்.ஏ மஞ்சு, பாமகவுக்கு தாவியதால் எம்.எல்.ஏ பதவி பறிபோனது. கமலகண்ணன் எம்.எல்.ஏ. திமுகவிலிருந்து காங்கிரஸுக்கு தாவியபோது ஆட்சி கவிழ்ந்தது டிஆர்.ராம்சந்திரன் திமுகவிலிருந்து அதிமுகவுக்கு பாய்ந்தார். கந்தசாமி தமாகா விலிருந்து காங்கிரஸுக்கு மாறியபோது 9 ½ லட்சம் ரூபாய் சர்ச்சை பெரிதாகப் பேசப்பட்டது.
இந்த பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக 2021-ல் காங்கிரஸ் அமைச்சர், மற்றும் எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு வெளிப்படையாகவே போவதால் இன்று காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து ஏழாவது முறையாகக் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைகிறது.
**-வணங்காமுடி**�,