நாளை சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கப்பட உள்ள நிலையில் பெரம்பலூர் திமுக எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. இதற்காக மரபுப்படி ஆளுநர் ஆர்.என். ரவியைச் சபாநாயகர் அப்பாவு, நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.
இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் சட்டமன்ற உறுப்பினர்கள், ஊழியர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி இருந்தாலும், ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்து சான்றிதழ் கொடுக்க வேண்டும். அப்போது தான் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என்று அப்பாவு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று எம்எல்ஏக்களுக்கு, அவரவர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதுபோன்று பத்திரிகையாளர்கள் மற்றும் அவை ஊழியர்களுக்குச் சென்னை தலைமைச் செயலகத்தில் பரிசோதனை செய்யப்பட்டது.
இந்நிலையில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் மற்றும் அவரது கார் ஓட்டுநர் ஜான், உதவியாளர் மணிகண்டன் ஆகியோருக்கு பரிசோதனை செய்ததில் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவர்கள் 3 பேரும் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் நாளை நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இவர் சமீப நாட்களாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக வீடு வீடாகச் சென்று வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து வந்தார் என்றும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.
**-பிரியா**
�,