பட்டின பிரவேசம்: திமுக ஆட்சிக்கு களங்கம்-கி.வீரமணி

politics

மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனத்தில் வரும் 22ஆம் தேதி நடக்க இருந்த பட்டின பிரவேசம் நிகழ்ச்சிக்கு திராவிடர் கழகத்தின் புகாரின்பேரில் மனிதரை மனிதர் தூக்கக் கூடாது என்ற அடிப்படையில் மயிலாடுதுறை கோட்டாட்சியர் தடை விதித்தார்.
இது பெரும் சர்ச்சையாகி இந்திய அளவில் பேசப்பட்ட நிலையில்… மே 7-ஆம் தேதி ஆதினங்கள் முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்தனர். அடுத்த நாள் காலை பட்டினப்பிரவேசம் பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சி நடத்த அரசு முறைப்படி அனுமதி அளித்தது.
இது குறித்து கருத்து தெரிவித்த மதுரை ஆதீனம், உள்ளூர் அளவிலேயே தெரிந்த இந்த நிகழ்ச்சியை பிற மாநிலங்கள் வரை பிரபலமாக்கிய திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி ஐயாவுக்கு நன்றி என்று தெரிவித்தார்.

திமுக அரசின் இந்த முடிவு குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி யின் எதிர்வினை என்ன என்பது பற்றிய எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் இருந்தது. நேற்று மே 9 இரவு திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி இதுகுறித்து தனது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளார்.

“இது முழுக்க மனிதநேய பிரச்சினையின்பாற்பட்டதாகும். தி.மு.க. ஆட்சியின் முற்போக்குக் கொள்கைத் திட்டங்களை மிரட்டிப் பணிய வைத்து முடக்கும் ஒரு காவித் திட்டம்.
இதில் ஓட்டை போட்டுவிட்டால் மற்றபடி மற்ற திட்டங்களில் நாம் வெற்றி அடையலாம் என்பதற்கான ஓர் ஒத்திகை என்பதை தமிழ்நாடு அரசுக்கு குறிப்பாக மரியாதைக்குரிய நமது முதலமைச்சர் அவர்களுக்கு நாம் கனிவுடன், உரிமையுடன் கொள்கை உணர்வு காரணமாக சுட்டிக்காட்டுகிறோம்.

தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் அன்று சுட்டிக்காட்டியதுபோல், பெரும்பான்மை மக்கள் நலனுக்கும் – சமூகநீதிக்கும் எதிரானவர்கள்தான் இந்த ஆன்மிக போர்வை போர்த்திய ‘நரியர்கள்!’

எனவே, இதுபற்றிய அச்சுறுத்தல்கள், அவதூறு புழுதிகள்கண்டு பின்வாங்கினால், எந்த ஒரு மாற்றமும், புரட்சிகரமான முன்னெடுப்புத் திட்டங்களும் வரும் நான்கு ஆண்டுகளில் தி.மு.க. ஆட்சியும், இன்றைய முதலமைச்சர் அவர்களும் செய்யவே இயலாத அளவுக்கு ஆக்கவே இன எதிரிகள் துணிவார்கள்.
‘‘துணிந்த பின் எண்ணுவது என்பது இழுக்கு’’
நடைமுறைத் திட்டங்களில் மறுபரிசீலனை – ஆட்சிக்கு இவையெல்லாம் சிக்கலை ஏற்படுத்தும் என்று விடுதலை’யில் மே 8ஆம் தேதி குறிப்பிட்டு இருந்தோம். ஆனாலும், நடக்கக் கூடாதது – இப்போது நடந்துவிட்டது.

இதனை எதிர்பார்க்கவில்லை.
ஆன்மிகம் என்பதைவிட இதன் பின்னணியில் பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். என்ற அரசியல் இருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது.
தங்களுக்கான வெற்றி என்று துள்ளிக் குதிப்பார்கள்; மதவெறி காவி சக்திகளும் மகிழ்வார்கள்.

முற்போக்காளர்களுக்கும், பகுத்தறிவாளர்களுக்கும் மனித உரிமைப் போராளிகளுக்கும் தமிழ்நாடு அரசின் பின்வாங்குதல் – இந்த பல்லக்குப் பிரச்சினையில் ஒரு தோல்வி என்று ஊடகங்கள் சித்தரிக்கக் கூடும். எப்போதுமே சமூகநீதிக்கான, மனித உரிமைப் போராட்டங்கள் உடனடியாக வெற்றியை தந்ததாக வரலாறு இல்லாவிட்டாலும், இறுதியில் சிரிப்பவர்கள் பகுத்தறிவாளர்களாகத்தான் இருப்பார்கள் என்பதற்கு வரலாற்றில் எத்தனையோ நிகழ்வுகள் உண்டு.
அது ஒரு புறமிருக்கட்டும்” என்று சுட்டிக் காட்டியுள்ள வீரமணி தொடர்ந்து,
” நமக்குள்ள ஆதங்கம் , தி.மு.க. ஆட்சிக்கு இப்படி ஒரு பின்னடைவை – களங்கத்தை – இந்தத் தடுமாற்ற முடிவு உருவாக்கிவிட்டதே என்பதுதான்!

தி.மு.க. ஆட்சி என்ற ‘’வாராது வந்த மாமணி’’யான ஆட்சியின் சாதனைகளும், புகழும் என்றும் ‘’ஆயிரங்காலத்துப் பயிராக’’ அமைய வேண்டும் என்பதில் நம்மைவிட அதிக அக்கறை உள்ளவர்கள் வேறு எவரும் இருக்க முடியாது.

எனவேதான் கொள்கைச் சறுக்கல்களோ, வழுவல்களோ நடந்துவிடக் கூடாது என்பதில் நமது பார்வையும், கவலையும், பொறுப்பும் அரசியலுக்கு அப்பாற்பட்ட இனமானப் பிரச்சினையாகும்!

மக்களாட்சியில் சில முடிவுகளை ஆட்சியாளர்கள் மறுபரிசீலனை செய்வது தவிர்க்க இயலாததுதான். ஆனால், அப்படிப்பட்ட மறுபரிசீலனைகள் அடிப்படை மனித உரிமைகளையும், சமத்துவ நெறிகளையும் பாதிப்பதாக அமைந்து விடக் கூடாது.

மதுரை ஆதின கர்த்தர் என்னைக் கேலி செய்வதாக நினைத்து, பல்லக்கை மனிதர்கள் சுமப்பது அநாகரிகம்; மனித உரிமை பறிப்புக் கூடாது என்ற அத்துணை முற்போக்கான தலைவர்களை, சிந்தனையாளர்களைக் கேலி செய்துள்ளார்.

உலகம் முழுவதும் இது விளம்பரப்படுத்தப்பட்டதாம் என்று கூறுகிறார். உலகம் முழுவதும் அந்த அநாகரிகமான, மனிதனை மனிதன் தூக்கி சுமப்பதைக் கண்டு இப்படி இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் பழைய மனித அநாகரிகங்களா? என்றுதான் முகம் சுளிப்பார்கள் – சிரிப்பார்கள் என்பதை பக்குவமடையாத பண்டார சந்நியாசி புரிந்துகொள்ள சக்தியற்ற பரிதாபத்திற்குரியவர் ஆவார்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கி. வீரமணி,
“மனிதர்களை தூக்கிச் சுமப்பதற்கு ஒரு விசித்திரமான புதிய வாதம் – முன் வைக்கப்படுகிறது!
தூக்குபவர்களே விரும்பி வந்துதான் தூக்கிச் சுமக்க முன் வருகிறார்களாம்! – இது அறிவுபூர்வமாகவோ, சட்டபூர்வமாகவோ ஏற்கத்தக்கதா?

கைரிக்ஷாவை இழுத்தவர்கள் அவர்களாகவே விரும்பித்தான் ஓட்டுகிறோம் என்று கூறி, இன்று இழுத்தால் சட்டம் அனுமதிக்குமா?

கருணைக் கொலை செய்ய, முற்றிய நோயினால் அவதியுறுகிறார்கள் – வலியும், வேதனையும் தாங்க முடியாத நிலை அவர்களுக்கு, ஆகவே, அதைச் செய்கிறோம் என்று எந்த டாக்டராவது சொன்னால் அனுமதிப்பார்களா?

குறிப்பிட்ட மாதங்களைத் தாண்டிய கருவை அதனைச் சுமப்பவர்கள் விரும்பி, தானே கருவை அழித்துக் கொள்ள விரும்புகிறார்கள் – அனுமதிக்கலாமா?
பெண் குழந்தைகளை கள்ளிப்பால் தந்து குடும்பத்தினர், ஏன் தாயுமே அழிக்க முன் வந்தால், சட்டமும் – அரசும் அனுமதிக்குமா?
மனித உரிமை மலிவான விலைச் சரக்கா?

இந்த அரசு சிலரைத் ‘திருப்தி’ செய்வதற்காக அளவுக்கு அதிகமாக ‘ஆன்மிகம்‘, ‘ஆன்மிகம்‘ என்று ‘தம்பட்டம்‘ அடிக்கவேண்டுமா?
தந்தை பெரியார் சொன்ன ஒரு பழமொழிதான் நமக்கு இப்போது நினைவுக்கு வருகிறது.

‘’மாமிசம் சாப்பிடுகிறவன் என்பதற்காக, நான் எலும்புத் துண்டைக் கழுத்தில் போட்டுக் கொண்டு அலைய வேண்டுமா?’’ என்பதுதான் அது.
எனவே, அடிப்படையில் பெரியார், அண்ணா, கலைஞர் வழியே பாதுகாப்பான நிரந்தர வழி!

எதிர்ப்பை உரமாக்கி எழுவதுதான் வெற்றி உலாவுக்கு நிரந்தர வெளிச்சம் என்பதை, உங்களுக்காக என்றும் பாதுகாக்கும் ஒரு இராணுவக் கட்டுப்பாடுடன் பாடுபடும் ஒரு போராளி என்ற உரிமையுடன் மானமிகு முதலமைச்சருக்கும், மற்ற அமைச்சரவையினருக்கும் வேதனையுடன் தெரிவித்தும், நாளையும் அதே பாதையில் எங்கள் பணி – எந்த நிலைப்பாட்டிலும் விட்டுக் கொடுக்காமல் தொடரும்” என்று தெரிவித்துள்ளார் கி வீரமணி.

**வேந்தன்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *