நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 29ஆம் தேதி தொடங்குகிறது.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் செப்டம்பர் 14ஆம் தேதி தொடங்கிய நிலையில், 8 நாட்கள் மட்டுமே நடைபெற்று செப்டம்பர் 24ஆம் தேதி நிறைவடைந்தது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் சமூக இடைவெளி ஆகியவை பின்பற்றப்பட்டும், 25க்கும் மேற்பட்ட எம்.பி.க்களுக்கும், நாடாளுமன்றப் பணியாளர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், கூட்டத் தொடர் முன்கூட்டியே முடித்துக்கொள்ளப்பட்டது.
கொரோனா பரவல் டெல்லியில் குறையாத நிலையில், குளிர்காலக் கூட்டத் தொடரை மத்திய அரசு ரத்து செய்தது. குளிர்காலக் கூட்டத் தொடரை வரும் பட்ஜெட் கூட்டத் தொடரோடு சேர்த்து நடத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவித்தது. ஆனால், வேளாண் சட்டங்கள் குறித்த விவாதத்தை தவிர்க்கவே குளிர்காலக் கூட்டத் தொடரை நடத்தவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
இந்த நிலையில் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை நேற்று ஆலோசனை நடத்தியது. அதன் முடிவில் பட்ஜெட் கூட்டத் தொடரை வரும் 29ஆம் தேதி கூட்டலாம் எனவும், ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடத்தலாம் எனவும் பரிந்துரை செய்தது.
அதாவது, முதல்கட்டக் கூட்டத் தொடர் ஜனவரி 29ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 15ஆம் தேதி வரை நடத்தலாம். கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு மார்ச் 8ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடத்தலாம் என்று பரிந்துரைக்கப்பட்டது. பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யவும் பரிந்துரைத்துள்ளது.
ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் நாடாளுமன்றக் கூட்டுக்குழு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் முழுமையாகப் பின்பற்றப்படும். எம்.பி.க்கள் சமூக விலகலுடன் அமரும் வகையில் இருக்கைகள் மாற்றி அமைக்கப்படும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
**எழில்**
�,