விடுபட்ட உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தலை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த நிலையில் பல்வேறு பகுதிகளில் மறைமுக தேர்தல் நடத்தப்படவில்லை. இந்நிலையில் மரக்காணம் ஊராட்சி ஒன்றிய தலைவர் துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தலில் பங்கேற்கும் வார்டு உறுப்பினர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் தேர்தல் நடைமுறைகளை வீடியோ பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் வார்டு உறுப்பினர் எஸ்.கண்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதுபோன்று மாமனந்தல் கிராம ஊராட்சிக்கு துணைத் தலைவர் தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரியும் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்குகள் நேற்று (நவம்பர் 12) தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சிவ சண்முகம், மரக்காணம் ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் நவம்பர் 22ஆம் தேதியும், மாமனந்தல் கிராம ஊராட்சி துணை தலைவர் பதவிக்கு நவம்பர் 24ஆம் தேதியும் தேர்தல் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முத்துக்குமார், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக தொடர்ந்த வழக்கில் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவின்படி வீடியோ பதிவு செய்யப்படும் என்றார்.
இதையடுத்து மறைமுக தேர்தல் நடத்தப்படாத பகுதிகளுக்கு எப்போது தேர்தல் நடத்தப்படும் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதியான உறுப்பினர்கள் மறைமுக தேர்தல் நடைபெறும் பகுதிக்குள் எவ்வித தடையும் இன்றி, எளிதாக செல்வதை மாநில தேர்தல் ஆணையமும் காவல் துறையும் உறுதி செய்ய வேண்டும்.
அதுபோன்று மறைமுக தேர்தலையும் தேர்தல் நடைபெறும் வளாகங்களில் நடக்கும் நடவடிக்கைகளையும் வீடியோ பதிவு செய்து அதனை 60 நாட்கள் பாதுகாக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
**பிரியா**
�,