துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், அதிமுகவின் ஒரே ஒரு மக்களவை உறுப்பினரான தேனி எம்பி ஓ.பி. ரவீந்திரநாத் தின் தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கை தொடர்ந்து நடத்தலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியிருக்கிறது. இந்த வழக்க்கை விசாரிக்கக் கூடாது என்று கேட்டு தேனி எம்பியான ஓ.பி. ரவீந்திரநாத் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ். ரமேஷ் இன்று (அக்டோபர் 16) தள்ளுபடி செய்துவிட்டார்.
2019 மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றிபெற்றார்.ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது என்று அறிவிக்கக் கோரி தேனி தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குத் தொடுத்தார்.
தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ஆண்டிப்பட்டியிலுள்ள அரசியல் கட்சி அலுவலகத்தில் வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ.1 கோடியே 48 லட்சம் ரூபாய் தேர்தல் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது. பணத்தைப் பறிமுதல் செய்யச் சென்றபோது கும்பல் ஒன்று அவர்களைத் தாக்கிவிட்டுப் பணத்தை எடுத்துச் செல்ல முற்பட்டதால் வானத்தை நோக்கி ஐந்து ரவுண்டுகள் துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது என்று தன் மனுவில் சுட்டிக் காட்டிய மிலானி,
“ரவீந்திரநாத் தனது வேட்பு மனுவில் பிரமாணப் பத்திரத்தில் தனது சொத்து விவரங்களையும், கடன் விவரங்களையும் முழுமையாக பதிவு செய்யாமல் மறைத்திருக்கிறார். இவ்வாறு செய்வது வாக்காளர்களை ஏமாற்றும் செயல் என்று உயர் நீதிமன்றம் தேர்தல் வழக்குகள் தொடர்பான ஆணைகளில் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் தான் சார்ந்த நிறுவனத்தில் பத்து கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கியதை வேட்பு மனுவில் மறைத்திருக்கிறார்”என்று சொல்லி ரவீந்திரநாத்தின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரினார் மிலானி.
2019 தேர்தல் முடிவுகளுக்குப் பின், தேனியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட ஈவிகேஸ் இளங்கோவன் தன் சார்பில் ரவீந்திரநாத்தின் வெற்றியை எதிர்த்து தேர்தல் வழக்குத் தொடுக்கத் தயாரானார். ஆனால் ஏனோ திடீரென அவர் வழக்குத் தொடராமல் விட்டுவிட்டார்.
இதையடுத்துதான் தேனி தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் இந்த தேர்தல் வழக்கை தொடுத்தார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர்கள் யாரும் வழக்குத் தொடுக்காத நிலையில், வாக்காளர் ஒருவர் தேர்தல் வழக்குத் தொடுப்பதை கவனித்த ஓபி. ரவீந்திரநாத் தரப்பினர் மிலானியை அணுகினார்கள். இந்த வழக்கை வாபஸ் பெறும்படி பல வகைகளிலும் அழுத்தம் கொடுத்தனர். ஆனால் அதையெல்லாம் மீறி இந்த வழக்கை மூத்த வழக்கறிஞர் அருண் மூலமாக தொடர்ந்து நடத்த முடிவெடுத்தார் மிலானி.
இதற்கிடையே வாக்காளர் மிலானி தொடுத்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என ஓ.பி. ரவீந்திரநாத் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி மாதம் மனு தாக்கல் செய்யப்பட்டது.
தேர்தல் வழக்கின் மீதான விசாரணை 2020 மார்ச் மாதம் தொடங்க இருந்த நிலையில், கொரோனா ஊரடங்கு அமலானதாலும், ஓபி. ரவீந்திரநாத்தின் புதிய மனுவாலும் தாமதம் ஏற்பட்டது.
மிலானி தரப்பின் முறையீட்டை அடுத்து ரவீந்திரநாத்தின் மனுவை உயர் நீதிமன்றம் விசாரித்தது. ஆனால் மனு செய்த ரவீந்திரநாத் தரப்பினர் டெல்லியில் இருந்து சீனியர் வழக்கறிஞர் வரவேண்டும் என்று வழக்கை இழுத்தடித்தனர். கடந்த 6 ஆம் தேதி மனு விசாரணைக்கு வந்தபோதும் இதையே ரவீந்திரநாத் தரப்பினர் சொல்ல, “இனியும் தாமதிக்க முடியாது”என்று கூறி நீதிமன்றம் விசாரணையை நடத்தியது. தேர்தல் வழக்கை விசாரிக்கக் கூடாது என்று ரவீந்திரநாத் தொடுத்த மனு மீதான தீர்ப்பு அக்டோபர் 16 வழங்கப்படும் என்றும் அறிவித்தது.
இது ஒருபக்கம் இருக்க… அதிமுகவில் இருக்கும் ஒரே எம்பியான ரவீந்திரநாத் மத்திய அமைச்சராக வேண்டும் என்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். தற்போது மத்திய அமைச்சரவையில் சிரோன்மணி அகாலி தள்,லோக் ஜனசக்தி உள்ளிட்ட கட்சிகளின் அமைச்சர்கள் இல்லை. கவுர் ராஜினாமா செய்துவிட்டார். பாஸ்வான் காலமாகிவிட்டார். தற்போது அமைச்சர்களிடம் கூடுதல் பொறுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் ரவீந்திரநாத்துக்கு தனி பொறுப்புடன் கூடிய மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படுமென்று எதிர்பார்த்திருக்கிறார்கள் அவரது தரப்பினர். இந்த நிலையில் ரவீந்திரநாத்தின் வெற்றிக்கு எதிரான வழக்கை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டால், மத்திய அமைச்சர் ஆகும் நிலையில் தேவையற்ற அரசியல் சிக்கல்கள் எழும் என கருதினார் ஓ.பன்னீர்.
இந்த சூழலில் கடந்த சனிக்கிழமையன்று திருப்பதி சென்றார் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம். இந்த பயணத்தின்போது தனது வெற்றிக்கு எதிராகதொடுக்கப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று ரவீந்திரநாத் நடத்தும் சட்டப் போராட்டம் வெற்றியடைய வேண்டும் என வேண்டிக் கொண்டிருக்கிறார் ஓபிஎஸ். கடவுளிடம் மட்டுமல்லாமல் திருப்பதியில் தான் சந்தித்த சிலரிடமும் கூட தனது இந்த விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தார் பன்னீர்.
ஆனால்…இன்று நீதிபதி ரமேஷ் அளித்த தீர்ப்பில், “ஓ.பி. ரவீந்திரநாத் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கில் முகாந்திரம் இருப்பதால் அவ்வழக்கை ரத்து செய்ய முடியாது” என்று குறிப்பிட்டார். இதனால் தேர்தல் வழக்கு விசாரணை தொடர்வதில் எந்தத் தடையும் இல்லை.
இந்த தீர்ப்பு பற்றி ஓ.பி. ரவீந்திரநாத் தரப்பில், “இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் எந்த பிரச்சினையும் இல்லை. தேர்தல் வழக்கை எதிர்கொள்ள ரவீந்திரநாத் தயாராகவே இருக்கிறார். இதனால் அவர் மத்திய அமைச்சர் ஆவதில் சட்ட சிக்கல்கள் எதுவும் இருக்காது” என்கிறார்கள்.
**வேந்தன்**
�,”