தமிழகம் சார்பில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மருத்துவ இடங்களை மீண்டும் தமிழ்நாட்டிற்கு ஒப்படைக்க மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது.
தமிழகத்தில் புதிதாகத் தொடங்கப்பட்ட 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்பட, மொத்தம், 37 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், இரண்டு அரசு பல் மருத்துவக் கல்லூரிகளிலும் மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 7,825 எம்பிபிஎஸ் மற்றும் 2,060 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. நிா்வாக ஒதுக்கீட்டுக்கு 1,742 இடங்கள் உள்ளன.
இந்நிலையில் தமிழகத்திலிருந்து 37 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள கிட்டத்தட்ட 5,125 மருத்துவ இருக்கைகளில், 15 விழுக்காடு இடங்கள், அதாவது 769 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்காக ஒதுக்கப்படுகின்றன.
இந்தச்சூழலில், 2021-2022 ஆம் ஆண்டு கல்வியாண்டின் மருத்துவ படிப்புக்கான நான்கு கலந்தாய்வு முடிவடைந்துள்ளது. அதன்படி தமிழக அரசு சார்பில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட்ட இடங்களில் 24 மருத்துவ இடங்கள் நிரம்பாமல் இருப்பது தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டுவரை அவ்வாறு நிரம்பாத இடங்களை மாநிலங்களுக்குத் திருப்பி ஒப்படைக்கும் நடைமுறை இருந்தது. ஆனால், நிகழாண்டில் அந்த இடங்களை ஒப்படைக்காமல் மத்திய அரசே அதனை நிரப்பும் வகையிலான கொள்கை முடிவு எடுக்கப்பட்டது. இதன் காரணமாக அந்த 24 இடங்களும் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தச்சூழலில் அந்த 24 இடங்களை மீண்டும் தமிழகத்திடம் ஒப்படைக்குமாறு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று திமுக அரசுக்கு எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒவ்வொரு மாநில அரசும் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு மருத்துவ இடங்களை ஒதுக்குகின்றன. இந்த இடங்களை மாணவ, மாணவியருக்கு ஒதுக்கும் பணியினை மத்திய சுகாதாரப் பணிகள் இயக்ககத்தின் – கட்டுப்பாட்டில் உள்ள மத்திய கலந்தாய்வுக் குழு ஒவ்வொரு ஆண்டும் மேற்கொண்டு வருகிறது. இந்தக் குழு 2021-2022 ஆம் ஆண்டு கல்வியாண்டிற்கான நான்கு கலந்தாய்வுகளை முடித்த நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கான 15 மருத்துவ இடங்கள், சென்னை மருத்துவக் கல்லூரிக்கான இரண்டு இடங்கள், சென்னை, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரிக்கான 5 இடங்கள், ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரிக்கான ஓரிடம் மற்றும் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரிக்கான ஓரிடம் என 24 இடங்கள் இன்னும் அகில இந்திய ஒதுக்கீட்டின் மூலம் ஒதுக்கப்படாமல் காலியாக உள்ளதாகவும், இது தவிர சுயநிதிக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டிற்கான சில இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.
பொதுவாக, இரண்டாவது கலந்தாய்வு முடிந்தவுடன், மத்தியக் கலந்தாய்வுக் குழுவினால் நிரப்பப்படாத மருத்துவ இடங்கள் அந்தந்த மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், இருப்பினும் இந்த ஆண்டு, மருத்துவச் சேர்க்கைக்கான இறுதி நாள் முடிந்த பிறகும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், நிரப்பப்படாத இடங்கள் அந்தந்த மாநிலங்களுக்கு இன்னமும் திருப்பி அளிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதன் மூலம் சுயநிதிக் கல்லூரிகளில் உள்ள இருக்கைகள் உட்பட கிட்டத்தட்ட ஐம்பது தமிழக மாணவ, மாணவியர் மருத்துவம் பயிலும் வாய்ப்பு பறிபோய் விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. அதிலும் குறிப்பாக அரசு மருத்துவக் கல்லூரிகளில் நிரப்பப்படாமல் உள்ள 24 மருத்துவ இருக்கைகள் மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரி அரசு ஒதுக்கீட்டின்படி ஒதுக்கவிருக்கும் 4 மருத்துவ இருக்கைகள் தகுதியுடைய ஏழை, எளிய மாணவ மாணவியருக்கு கிடைக்காமல் போகும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
அகில இந்திய ஒதுக்கீட்டிற்காக ஒதுக்கப்பட்டு, நான்கு கலந்தாய்வுகளுக்குப் பின்பும் நிரப்பப்படாமல் இருக்கும் நிலையில், அந்த இருக்கைகளை மத்திய அரசிடம் இருந்து திரும்பப் பெற்று, அவற்றை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மருத்துவம் பயில வேண்டுமென்ற ஆர்வம் கொண்ட தகுதியுடையோர் மத்தியில் நிலவுகிறது.
எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாக தலையிட்டு, மத்திய அரசுடன் கலந்தாலோசித்து, அகில இந்திய ஒதுக்கீடு மூலம் தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் நிரப்பப்படாத மருத்துவ இருக்கைகளை மத்திய அரசிடமிருந்து பெறவும், அவற்றை தமிழ்நாட்டை சேர்ந்தோருக்கு தகுதியின் அடிப்படையில் வழங்கவும், மருத்துவச் சேர்க்கை அனுமதிக்கான நாளை நீட்டிக்கவும் வழிவகை செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
அதுபோன்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், “அகில இந்தியத் தொகுப்பில் நிரப்பப்படாத இடங்கள் மீண்டும் மாநில அரசு கல்லூரிகளிடமே ஒப்படைக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அகில இந்தியத் தொகுப்பை ரத்து செய்து விட்டு, அனைத்து இடங்களையும் மாநில அரசுகளே நிரப்ப அனுமதிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
**-பிரியா**