கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் முறையிலேயே தேர்வு நடத்த வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் நடந்து வருகிறது. இந்நிலையில் செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்தக் கோரி கடந்த ஒரு வாரமாக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். ஆனால், செமஸ்டர் தேர்வு நேரடியாக மட்டுமே நடைபெறும் என்று உயர்கல்வித் துறை அறிவித்தது. இதை எதிர்த்தும் மாணவர்கள் போராடினர்.
மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு அளித்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ், சீமான் உள்ளிட்டோர் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியிலேயே தேர்வு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதையடுத்து முதல்வரின் அறிவுறுத்தலின்படி உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி நேற்று(நவம்பர் 19)மாணவர் சங்கங்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,” நேரடி தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் வகையில் இரண்டு மாதம் கால அவகாசம் அளித்து ஜனவரி 20ஆம் தேதிக்கு பிறகு செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும். அதற்குள்ளாக மாணவர்களுக்கு அனைத்து பாடங்களும் நடத்தி முடிக்கப்படும். மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்ப பெறப்படும்” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று(நவம்பர் 20) வெளியிட்டுள்ள அறிக்கையில்,” கொரோனா நோய் தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. பின்னர் மாணவர்களின் நலன் கருதி ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில், தற்போது பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டு . நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
கடந்த செப்டம்பர் மாதம் முதல் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் நடந்து வந்தாலும் பண்டிகைகள் பருவமழை என அடிக்கடி விடுமுறை விடப்படுவதால், கல்லூரிகளில் நடப்பு தேர்வுக்கான பாடங்களை முழுமையாக முடிக்கப்படவில்லை என மாணவர்கள் கூறுகின்றனர். மேலும் ஆன்லைனில் வகுப்புகள் சரியாக நடைபெறவில்லை. ஆன்லைன் வகுப்புகளை எங்களால் சரிவர கவனிக்க முடியவில்லை என மாணவர்களே தெரிவித்துள்ளனர்.
இதுபோன்ற சூழலில் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் நேரடியாகவே நடத்தப்படும் என்று தமிழக அரசு பிடிவாதமாக இருப்பது மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைன் வகுப்புகளில் பாடங்களை முழுமையாக உள்வாங்க முடியாத நிலையில், நேரடி தேர்வுகள் நடத்தப்பட்டால், தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற அச்சம் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மேலும் நேரடி தேர்வுகள் நடத்த தமிழக அரசு இரண்டு மாதம் கால அவகாசம் வழங்கினாலும், அதற்குள் மாணவர்கள் தயாராவார்களா என்பது கேள்விகுறியே. எனவே மாணவர்களின் நலன் கருதி, நடப்பு செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் முறையிலேயே நடத்த வேண்டும். ஆன்லைனில் தேர்வுகளை நடத்தக் கோரி போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளையும் தமிழக அரசு உடனே திரும்ப பெற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
**-வினிதா**
�,