இரவு நேர ஊரடங்கு : காவல்துறைக்கு டிஜிபி அறிவுறுத்தல்!

Published On:

| By Balaji

தமிழ்நாட்டில் மின்னல் வேகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஜனவரி 6ஆம் தேதியிலிருந்து இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணிவரை இரவுநேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமையன்று முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. நேற்று முதல் இரவுநேர ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இரவுநேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கின்போது காவல்துறையினர் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டிருந்தார்.

அதில், “மத்திய மற்றும் மாநில அரசுத் துறை அதிகாரிகள், ஊழியர்கள், நீதிமன்றம் மற்றும் நீதித் துறை தொடர்பான பணிகளில் ஈடுபடுவோர், உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரிவோர், வங்கி, பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் பணியாற்றுவோர்களை அலுவல் காரணமாக பயணம் மேற்கொள்ள அடையாள அட்டையை பார்வையிட்டு அனுமதிக்க வேண்டும்.

அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், மின்சாரம், தகவல் தொடர்பு, தினசரி பத்திரிகை விநியோகம், மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த அனைத்து சேவைகள், ஏடிஎம் மையங்கள், சரக்கு மற்றும் எரிபொருள் வாகனங்களில் பணிபுரிவோர் அடையாள அட்டையை பார்வையிட்டு உடனடியாக அனுமதிக்க வேண்டும்.

சரக்கு வாகனத்தில் கொண்டு செல்லப்படும் விவசாய விலைபொருட்கள், காய்கறி,பழங்கள், கறிகோழிகள், முட்டை போன்ற வாகனங்களை எக்காரணம் கொண்டும் தடை செய்யக் கூடாது. மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் சரக்கு வாகனங்களுக்கு இது பொருந்தும்.

உற்பத்தி தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப சேவை உள்ளிட்ட நிறுவனப்பணியாளர்கள் அடையாள அட்டை காண்பித்து பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்.

முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளபோது உணவகங்களில் பார்சல் சேவைகள் மட்டும் காலை 7 மணி முதல் இரவு 10 மணிவரை அனுமதிக்கப்படும். உணவு டெலிவரி செய்யும் மின்வணிக நிறுவனப் பணியாளர்களை மேற்குறிப்பிட்ட நேரங்களில் செயல்பட அனுமதிக்க வேண்டும்.

மத்திய மற்றும் மாநில அரசுப்பணியாளர் தேர்வாணையம், நிறுவனங்களின் நுழைவுத் தேர்வு மற்றும் வேலைவாய்ப்புக்கான நேர்முகத் தேர்வுகளுக்கு செல்வோர் அழைப்பு கடிதத்தை காட்டினால் அனுமதிக்க வேண்டும். ஜனவரி 9ஆம் தேதியன்று மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணிகளுக்கான தேர்வுகள் நடக்கவுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

விமானம், ரயில் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு செல்லும் பயணிகளையும், விமானம், ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் இருந்து வீடுகளுக்கு செல்லும் பயணிகளையும் அனுமதிக்க வேண்டும். சொந்த மற்றும் வாடகை வாகனங்களை பயன்படுத்த அனுமதி உண்டு.

கிராமப்புற பகுதிகளில் விவசாயிகள், விவசாயப் பணிக்காக செல்பவர்களை அனுமதிக்க வேண்டும்.அவசர காரணங்களுக்காக வெளியூர் செல்வோர், பணிமுடிந்து சொந்த ஊருக்கு திரும்புவோரை பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்.

வாகனச் சோதனையின்போது வாகன ஓட்டிகளிடம் கனிவாகவும், மனித நேயத்துடனும் நடந்து கொள்ள வேண்டும்.

வாகனத்தை சோதனை செய்ய வேண்டியிருந்தால் கையுறை அணிந்திருக்க வேண்டும். அடிக்கடி கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

இரவு வாகனச் சோதனை வெளிச்சம் உள்ள இடங்களில் நடத்த வேண்டும்.

காவலர்கள் தடுப்புகளை அமைத்து ஒளிரும் மேற்சட்டை அணிந்து பாதுகாப்பாக இரவு நேரங்களில் பணியாற்ற வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share