சட்டமன்றத்தில் கோழி வளர்ப்புத் திட்டம் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார்.
சட்டமன்றத்தில் நேற்று (மார்ச் 17) கால்நடைத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. திமுக சார்பில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன், “இலவச கோழி வளர்ப்புத் திட்டத்தில் பயனாளிகளுக்கு வழங்கப்படும் கோழிகள் குஞ்சு பொரிப்பதில்லை. கோழிக் குஞ்சுகள் வளர்க்க வழங்கப்படும் கூண்டுகள் சிறியவையாக உள்ளன” என்று கூறினார்.
இதற்குப் பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “இலவச கோழி வளர்ப்புத் திட்டத்தின் கீழ் பயனாளி ஒருவருக்கு 25 கோழிகள் வழங்கப்படுகின்றன. அதில் 15 பெட்டைக் கோழிகள், 10 சேவல்களும் அடங்கும். அதிகமான பயனாளிகள் பயன் அடையவேண்டும் என்பதற்காகத்தான் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. சென்னையிலுள்ள என்னுடைய வீட்டில் கூட இரண்டு கோழிகள் வளர்க்கிறேன். அவை இரண்டு தலா 14 முட்டை போட்டு அடை வைத்ததில் 28 கோழிக் குஞ்சுகள் பொரித்துள்ளன” என்று கலகலவெனத் தெரிவித்தார்.
உடனே எழுந்த உதயசூரியன், அது நல்ல கோழியாக இருக்கும் எனத் தெரிவிக்க, “கோழியில் எது நல்ல கோழி, கெட்ட கோழி… எல்லா கோழிகளும் நல்ல கோழிகள்தான். மனிதர்களிடம்தான் வேறுபாடு உள்ளது” என்று தெரிவித்தார். இந்த ருசிகர விவாதத்தால் அவையில் சிரிப்பொலி எழுந்தது.
**-எழில்**
�,