தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று (ஜூலை 3) காலை சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்குப் புறப்பட்டு சென்றார். அங்கே சில மணி நேரங்கள் இருந்த அவர், பின் தன் வீட்டுக்குத் திரும்பிவிட்டார்.
முதல்வர் ஸ்டாலின் தனது மருத்துவ சிகிச்சைக்காக வருடத்துக்கு ஒருமுறை லண்டன் சென்று வருவார். ஆனால் கடந்த வருடம் கொரோனா பரவல் இங்கிலாந்தை கடுமையாக பாதித்த நிலையில் அந்நாட்டுக்கு சென்று வரமுடியவில்லை. இந்த வருடமும் அவர் லண்டன் செல்ல திட்டமிட்டும், இன்னும் செல்லவில்லை.
இந்த நிலையில் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு இன்று முதல்வர் சென்று வந்தது பற்றி அம்மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்தியில், “இன்று (ஜூலை 3) காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வழக்கமான அரையாண்டுக்கு ஒருமுறை செய்துகொள்ளும் மெடிக்கல் செக்கப் செய்துகொள்வதற்காக மருத்துவமனைக்கு வந்தார். அவருக்கான மருத்துவ பரிசோதனைகள் முடிவுற்றதும் உடனடியாக அவர் மருத்துவமனையை விட்டுப் புறப்பட்டார்” என்று கூறப்பட்டுள்ளது.
முதல்வருக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்தோம்.
“தேர்தலுக்காக கடந்த ஜனவரி மாதத்தில் இருந்தே தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார் ஸ்டாலின். தமிழகம் முழுமைக்கும் சுற்றுப் பயணம் செய்தார். தேர்தல் முடிந்ததும் வாக்கு எண்ணிக்கைக்கு முன் கிடைத்த இடைவெளியில் மாலத்தீவுக்கு பயணம் செய்ய திட்டமிட்டார். ஆனால் அதுவும் கைவிடப்பட்டு கொடைக்கானலுக்கு குடும்பத்தோடு சென்று சில நாட்கள் தங்கினார். அதுதான் அவர் ஓய்வெடுத்த சில நாட்கள். ஆனால் அங்கேயும் அடுத்த அமைச்சரவை பற்றிய ஆலோசனைகள் என்று வேலைகளில்தான் இருந்தார்.
தேர்தல் முடிவு வெளிவந்து திமுக ஆட்சி அமைத்தாலும் கூட ஸ்டாலினுக்கு மன நிறைவாக இல்லை. ஏனெனில் கொரோனா தொற்று வேகமாக பரவிக் கொண்டிருந்ததால் அதைத் தடுப்பதற்காக கடுமையாக உழைத்தார். முதல்வரான பிறகு அவர் உறங்கும் நேரமே குறைந்துவிட்டது. இதனால் ரத்த அழுத்த அளவிலும் மாறுபாடுகள் ஏற்பட்டன.
இந்த நிலையில்தான் இன்று அதிகாலை லேசாக மூச்சு வாங்குவது போல உணர்ந்தவுடன் 6.50 க்கெல்லாம் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு சென்றுவிட்டார். அங்கே சில சோதனைகள் ஸ்டாலினுக்கு மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. பரிசோதனைகள் முடிந்தபின்னர் உடனடியாக காலை 9.30 மணிக்கெல்லாம் வீடு திரும்பிவிட்டார் முதல்வர் ஸ்டாலின்” என்கிறார்கள்.
**-வணங்காமுடிவேந்தன்**�,