�
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 17) காலை 7.30மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு காலை 10.30 மணியளவில் டெல்லி விமான நிலையம் சென்றடைந்தார். கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகள் காரணமாக விமான நிலையத்தில் மக்களவை திமுக தலைவர் டி.ஆர்.பாலு, துணைத் தலைவர் கனிமொழி உள்ளிட்ட சிலரே முதல்வர் ஸ்டாலினை வரவேற்றனர்.
விமான நிலையத்தில் இருந்தபடியே டெல்லி தீனதயாள் உபாத்யாயா மார்க்கில் கட்டப்பட்டு வரும் திமுக அலுவலகத்தை பார்வையிடுவதற்காக புறப்பட்டார் மு.க.ஸ்டாலின். அங்கே திமுக அலுவலகப் பணிகளைப் பார்வையிட்டு சில ஆலோசனைகளை தெரிவித்துவிட்டு, அதன் பிறகே டெல்லியில் இருக்கும் தமிழ்நாடு இல்லத்துக்குச் சென்றார்.
டெல்லி சாணக்யா புரியில் அமைந்திருக்கும் தமிழ்நாடு இல்லத்தில் முதல்வர் ஸ்டாலினை தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு, தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆகியோர் வரவேற்றனர்.
பின் தமிழ்நாடு இல்லத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு போலீஸாரின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதற்குப் பின் திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களோடு ஆலோசனை நடத்தி வருகிறார் ஸ்டாலின்.
இந்த ஆலோசனைக்குப் பின் மதிய உணவு எடுத்துக்கொண்டு அதன் பிறகு சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு மாலை 5 மணிக்கு பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இந்த சந்திப்பு தமிழ்நாட்டு அரசியலில் பல மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
**-வேந்தன்**
�,