2019 மக்களவைத் தேர்தலை அதிமுக கூட்டணியில் இருந்து பாமக எதிர்கொண்டது. கடந்த டிசம்பர் 1ஆம் தேதியில் இருந்து வன்னியர்களுக்கு 20 சதவிகிதம் தனி இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்தி வருகிறது பாமக. அதன் கோரிக்கையை ஏற்று முதற்கட்டமாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஆணையம் அமைக்கப்படுவதாக முதல்வர் அறிவித்த நிலையில், இது காலம் தாழ்த்தும் நடவடிக்கை என பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சனம் செய்தார்.
இதனிடையே பாஜகவுடன் சட்டமன்றத் தேர்தல் கூட்டணி தொடரும் என அதிமுக அறிவித்துவிட்டது. தற்போது சட்டமன்றத் தேர்தல் தொடர்பான பணிகள் வேகமெடுத்துள்ள நிலையில் பிரச்சாரத்தையும், கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையையும் அதிமுக ஆரம்பித்துவிட்டது.
இந்த நிலையில் ராமதாஸை சமாதானப்படுத்தும் விதமாகவும் அமைச்சர்கள் சிவி. சண்முகம், தங்கமணி,கே.பி.அன்பழகன் மூவரிடமும் அவரை நேரில் சந்தித்து பேசச் சொல்லியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஆனால், தான் செல்ல முடியாது என சி.வி.சண்முகம் மறுத்துவிட்டார். இதனால், தங்கமணி, கே.பி.அன்பழகன் ஆகிய இருவரும் நேற்று டிசம்பர் 22ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு தைலாபுரம் தோட்டத்துக்கு சென்றுள்ளனர்.
எனினும், பாமக தரப்பிலிருந்து அவர்களுக்கு சரியான ரெஸ்பான்ஸ் இல்லை என்கிறது அதிமுக வட்டாரம்.
தங்கமணி கூட்டணி பற்றி ராமதாஸிடம் பேசியபோது, 31ஆம் தேதி பொதுக் குழுவைக் கூட்டி சொல்கிறேன் என்று 10 நிமிடங்களில் பேச்சு வார்த்தையை முடித்தார். 6.45 மணிக்கெல்லாம் இரண்டு அமைச்சர்களும் தைலாபுரத்திலிருந்து வெளியே வந்துவிட்டனர். அதன்பிறகு அமைச்சர் சி.வி.சண்முகம் வீட்டிற்குச் சென்று ஒரு மணி நேரத்துக்கு மேலாக மூவரும் ஆலோசனை நடத்தினர்.
அங்கிருந்தபடியே முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொடர்பு கொண்ட தங்கமணி, ராமதாஸுடனான சந்திப்பில் நடந்தவற்றை விளக்கினார். அமைதியாக கேட்டுக் கொண்ட முதல்வர், சரி பார்த்துக்கொள்ளலாம் என சொல்லிவிட்டு போனை வைத்திருக்கிறார் எனக் கூறுகிறார்கள் அதிமுக வட்டாரங்களில்.
**வணங்காமுடி**�,