இழப்பை சரிசெய்ய ஸ்மார்ட் மீட்டர்: அமைச்சர் செந்தில் பாலாஜி

Published On:

| By Balaji

மின் வாரியத்தில் ஏற்பட்டுள்ள இழப்பை சரி செய்ய மின் கணக்கீடு செய்யும் முறை ஸ்மார்ட் மீட்டர் முறையாக மாற்றம் செய்யப்படும் என மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் மின் விநியோகம் மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஆய்வுக்கூட்டம் இன்று(ஜூலை 2) நடைபெற்றது.

இதில் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மின் பகிர்மான கழக தலைவர் ராஜேஷ் லக்கானி, மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மின்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “கடந்த ஆட்சியில் 9 மாதங்களாக செய்யப்படாமல் இருந்த பராமரிப்பு பணிகள் 10 நாட்களில் முடிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் புதிதாக மின் இணைப்பை பெறுபவர்களுக்கு மின் கம்பம், மின் மாற்றியை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கான செலவு தொகை பொதுமக்களிடமிருந்து பெறப்படாது. அதை மின்வாரியமே ஏற்கும்.

இன்று நடந்த ஆய்வுக்கூட்டத்தில் மின்நுகர்வோர் சேவை மையத்தில் வரக்கூடிய அழைப்புகள், கோரிக்கைகள் மற்றும் புகார்கள் பற்றி ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

தமிழ்நாடு முழுவதும் மின் கணக்கீட்டிற்கான மீட்டர் ஸ்மார்ட் மீட்டராக இருக்க வேண்டும் என்பதே முதல்வரின் இலக்கு. உற்பத்தியாகும் மின்சாரத்திற்கும் விநியோகமாகும் மின்சாரத்திற்கும் இடைவெளி அதிகமாக உள்ளதால் பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. இந்த இழப்பை சரி செய்ய மின் கணக்கீடு செய்யும் முறை டிஜிட்டல் மீட்டர் முறையிலிருந்து ஸ்மார்ட் மீட்டர் முறையாக மாற்றம் செய்யப்படும்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “2006 முதல் 5 ஆண்டுகள் மின் தேவை அதிகரித்த நேரத்திலும் மின் வழித்தடம் அதிகமாக இல்லாத நிலையிலும் தனியாரிடமிருந்து யூனிட்டிற்கு 3 ரூபாய் 58 பைசாவிற்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் 5 ரூபாய் 1 பைசாவிற்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் தனியார் நிறுவனங்களிலிருந்து மின்சாரம் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளது. உப்பூர் அனல்மின் நிலையம் அமைப்பதற்கான தடை நீக்கப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியில் வசிக்கும் மக்களிடம் கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும்.

கடந்த ஆட்சியில் மின்சார வாரியத்திற்கு ஒதுக்கப்பட்ட நான்கரை லட்சம் கோடி ரூபாயில் எத்தனை திட்டங்கள் செயல்படுத்தபட்டது? பொறுப்பில் இருந்தவர்கள் தங்களது தவறுகளை ஒத்துக்கொள்ள வேண்டும்.

அவர்கள் செய்ய தவறிய திட்டங்களை திமுக ஆட்சி முன்னெடுத்து செய்வதை வரவேற்க வேண்டும். கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்டு, நிலுவையில் உள்ள மின்துறை திட்டங்களை செயல்படுத்த தீவிரமான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

டெல்லி, ஹரியானா போன்ற மாநிலங்களில் ஸ்மார்ட் மீட்டர் முறை பயன்பாட்டில் உள்ளது. தற்போது தமிழ்நாட்டிலும் இந்த முறை பயன்பாட்டுக்கு வரவுள்ளது. ஸ்மார்ட் மீட்டர் முறையில் பல நன்மைகள் இருப்பதாக கூறப்படுகிறது. மின் கணக்கீட்டுக்கு ஸ்மார்ட் மீட்டர் பயன்படுத்தினால், ஆன்லைனிலேயே மின்சார கணக்கெடுப்பு நடக்கும். எளிமையான முறையில் மின்சார கட்டணம் செலுத்திக் கொள்ளலாம்.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share