ஆவின் நிறுவனத்தில் முறைகேடான நியமனங்கள் ரத்து செய்யப்பட்டு, டிஎன்பிஎஸ்சி மூலமாக தேர்வு நடத்தப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் புதிய ஆட்சி அமைந்ததிலிருந்து, முதல் வேலையாக அந்தந்த துறைகளில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதுபோன்று ஆவின் நிறுவனங்களில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்ததையடுத்து, 34 பொது மேலாளர்கள் கூண்டோடு பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் சென்னையில் நேற்று (ஜூலை 20) செய்தியாளர்களைச் சந்தித்த பால்வளத்துறை அமைச்சர் நாசர், “ஆவின் பொருட்களை மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஆவின் பால் விலை குறைக்கப்பட்ட பின்பு விற்பனை அதிகரித்துள்ளது. இதனால் பால் கொள்முதலை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆவின் நிறுவனத்தில் முறைகேடாக 636 பணியிடங்கள் நியமனம் செய்யப்பட்டது கண்டறியப்பட்டு அவை அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்தப் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தப்பட்டு, நியமனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று கூறினார்.
**-வினிதா**
�,