போலி ரசீது மூலம் வரி ஏய்ப்பு: அமைச்சர் எச்சரிக்கை!

Published On:

| By Balaji

போலி ரசீது மூலம் வரி ஏய்ப்பு செய்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி எச்சரித்துள்ளார்.

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள வணிகர்களுடனான கலந்தாய்வு கூட்டம், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வணிகவரித் துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் இன்று(ஜூன் 19) நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ், சட்டப்பேரவை உறுப்பினர்கள் அப்துல் வகாப், ரூபி மனோகரன் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பி.மூர்த்தி, “ 11 ஆண்டுகளுக்கு பின் வணிகர்களை நேரடியாக அழைத்து ஜிஎஸ்டி தொடர்பான கருத்துக்களை கேட்டு வருகிறோம். அவர்களின் கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆண்டு மட்டும் ஒன்றிய அரசிடமிருந்து ஜிஎஸ்டி நிலுவைத் தொகை 15 ஆயிரம் கோடி ரூபாய் வர வேண்டியுள்ளது.

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்துக்கொண்ட நிதியமைச்சர் பல்வேறு விதி விலக்குகளை ஒன்றிய அரசிடம் கேட்டுள்ளார். கொரோனோவால் பாதிக்கப்பட்ட மக்கள் பயன்படுத்தும் பொருள்களின் வரி 18 லிருந்து 5 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்து வரி வதிப்பு பூஜ்ஜியமாக்கப்பட்டுள்ளது.

போலி ரசீது மூலம் வரி ஏய்ப்பு செய்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். முடிந்தால் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும்.

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து ஒன்றிய அரசிடம் கோரிக்கை விடுத்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து நடவடிக்கை எடுப்பார்” என்று கூறினார்.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share