மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தமிழ்நாடு – கர்நாடகா இடையே சுமுக முடிவு எட்டப்பட்டால் மட்டுமே சுற்றுச்சூழல் அனுமதி என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடகா அரசு புதிதாக அணையைக் கட்ட முயற்சி செய்கிறது. இந்த அணை மட்டும் கட்டப்பட்டால் தமிழக விவசாயிகள் பலரும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதால் இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் நேற்று (பிப்ரவரி 7) கர்நாடக மாநில எம்.பி மேகதாது அணைக்கு அனுமதி எப்போது என வழங்கப்படும் என்று என எழுத்துபூர்வமாக கேள்வி எழுப்பினார். இந்தக் கேள்விக்கு பதிலளித்த மத்திய சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்ற இணையமைச்சர் அஸ்வினி குமார், “மத்திய அரசுக்குக் கிடைக்கப் பெற்ற சாத்தியக்கூறு அறிக்கையின் அடிப்படையில் மொத்தம் 4,996 ஹெக்டேர் நிலம் நீரில் மூழ்கும். சங்கமா, மடவாளா, பொம்மை சந்திரா உள்ளிட்ட கிராமங்களும் நீரில் மூழ்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் அனுமதி அளிக்கும் விவகாரத்தில் மத்திய நீர் வள அமைச்சகமும், காவிரி மேலாண்மை ஆணையமும் திட்ட அறிக்கையை ஏற்ற பிறகே முன்மொழிவை சுற்றுச்சூழல் அமைச்சகம் முடிவு செய்யும். மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தமிழ்நாடு – கர்நாடகா இடையே சுமுக முடிவு எட்டப்பட்டால் மட்டுமே சுற்றுச்சூழல் அனுமதி அளிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில், தலைநகர் டெல்லியில் பாஜக எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், “நதிகள் விவகாரத்தில் கர்நாடகா எப்போதும் தனது உரிமையை விட்டுக்கொடுக்காது” எனத் தெரிவித்துள்ளார்.
**-ராஜ்**
.