எம்பிசியில் வன்னியர்கள் 80% இருக்கிறோம்: அன்புமணி

Published On:

| By Balaji

சமூக நீதிப் பேரவை சார்பில் வன்னியர் உள் ஒதுக்கீடு குறித்த சந்தேகங்களும் அதுகுறித்த விளக்கங்களும் என்ற கருத்தரங்கம் இன்று (ஜனவரி 27) நடந்தது இந்த இணைய வழி கருத்தரங்கத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸும், பாமக தலைவர் ஜி.கே.மணி, இளைஞரணித் தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கருத்தரங்கத்தைத் தொகுத்து வழங்கிய வழக்கறிஞர் கே.பாலு, முதலில் டாக்டர் ராமதாஸ் பேசுவார் என்று குறிப்பிட, முதல்ல அன்புமணி பேசட்டும்’ என்று ராமதாஸ் கூறினார்.

பின் பேசிய அன்புமணி ராமதாஸ், “வன்னியர் இட ஒதுக்கீடு உள் ஒதுக்கீடு கோரிக்கையை ஏன் இப்போது வைத்திருக்கிறார்கள்… தேர்தல் நேரத்தில் பேரம் பேசும் உத்தியா?” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

பாமக தொடங்கப்பட்ட நாளில் இருந்து அதாவது 1989 இல் இருந்து பல சமுதாயங்களுக்கு இட ஒதுக்கீட்டை ஐயா அவர்கள் தலைமையில் வாங்கித் தந்திருக்கிறோம். இஸ்லாமியர்களுக்கு, அருந்ததியர்களுக்கு நாம்தான் உள் ஒதுக்கீடு வாங்கித் தந்திருக்கிறோம்” என்று பேச குறுக்கிட்ட ராமதாஸ், “நான் இந்த இரு சமூகங்களுக்காக பல போராட்டங்கள் மாநாடுகள் நடத்தியபிறகுதான் இந்த உள் ஒதுக்கீடு அந்த சமூகங்களுக்கு கிடைத்தது” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அன்புமணி “பாமக கொடுத்த அரசியல் அழுத்தத்தால்தான் இஸ்லாமியர் , அருந்ததியர் உள் ஒதுக்கீடு கிடைத்தது. இதேபோன்று ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் 27% ஓபிசி மக்களுக்கு கல்வியில் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று (வி.பி.சிங் வேலைவாய்ப்பில் கொடுத்தார்) கோரிக்கை வைத்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகும் கொடுக்கவில்லை. யுபிஏ கூட்டத்தில், ‘ஒபிசிக்கு 27 ஒதுக்கீடு கொடுக்காவிட்டால் நாங்கள் கூட்டணியில் இருக்க மாட்டோம்’ என்று ராமதாஸ் பேசினார். அன்று மாலையில் நடந்த யுபிஏ கூட்டத்தில் ஓபிசி பிரிவுக்கு 27% கல்வியில் ஒதுக்கீடு அறிவித்தார்கள். அதையடுத்து டாக்டர் ராமதாஸிடம், ‘ஆர் யு ஹேப்பி நவ்’என்று கேட்டார் சோனியா காந்தி. இதையும் வாங்கிக் கொடுத்தது பாமகதான் என்று குறிப்பிட்டுள்ளார். பின் எம்பிசி இட ஒதுக்கீட்டில் கலைஞர் கொடுத்த இட ஒதுக்கீட்டை சுட்டிக்காட்டினார்.

“பாமக 5 சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு பெற்றுக் கொடுத்திருக்கிறது. எங்களுக்கு இட ஒதுக்கீடு கேட்கக் கூடாதா? எம்பிசியில் வன்னியர்கள் 80% இருக்கிறோம். தமிழகத்தில் 24% வன்னியர்கள் இருக்கிறோம். தமிழ்நாடு முன்னேற வேண்டுமானால் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும். வன்னியர்களுக்கு சரியான கல்வி இல்லை. நமது இட ஒதுக்கீட்டை பிற சமுதாயத்தினர் எடுத்துக்கொண்டு போகிறார்கள். அதனால்தான் நாம் போராடுகிறோம்” என்று குறிப்பிட்டார் அன்புமணி.

**-வேந்தன்**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share