உள்ளாட்சித் தேர்தலில் நேர்மையின் அறிகுறி தெரியவில்லை:கமல்

Published On:

| By Balaji

ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்,மற்றும் பிற மாவட்டங்களில் விடுபட்ட இடங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் வரும் அக்டோபர் 6, 9 தேதிகளில் நடைபெறும் நிலையில், இன்று ( செப்டம்பர்25) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அப்போது உள்ளாட்சித் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் ஆளுங்கட்சியான திமுகவுக்கு சாதகமாக வெளிப்படையாக நடந்துகொள்வதாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் குற்றம் சாட்டியிருக்கிறார்.

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், “சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஒன்றிய 9வது வார்டில் மநீம சார்பில் போட்டியிட விண்ணப்பித்திருந்த பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்தவர் உள்ளூர் திமுக பிரமுகரால் அச்சுறுத்தப்பட்டு வேட்புமனுவும் திரும்பப் பெறப்பட்டுள்ளது. உள்ளாட்சித்தேர்தல் நேர்மையாக நடைபெறும் என்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் செந்தில் ஆறுமுகம் வெளியிட்டுள்ள செய்தியில்,

“ சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில் உள்ள வார்டு எண் 9-ல் மக்கள் நீதி மய்யம் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. வேட்பு மனு ஏற்கப்பட்ட நிலையில், உள்ளூரில் உள்ள தி.மு.க முக்கியப் பிரமுகர் விடுத்த கடும் மிரட்டல் காரணமாகவே, மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் தனது வேட்புமனுவை நேற்று (24-09-2021) வாபஸ் பெற்றுள்ளார்.

பட்டியலினத்தைச் சேர்ந்தவரும், ஆட்டோ தொழிலாளியுமான ம.நீ.ம வேட்பாளர், ஆளுங்கட்சியினரின் மிரட்டலுக்கு எதிராகப் புகார் கொடுத்தால் தனக்குத் தொடர்ந்து அச்சுறுத்தல் வருமோ என்ற அச்சத்தில் உறைந்துபோயுள்ளார்.

இது அப்பட்டமான ஜனநாயக விரோதப்போக்கு. சட்டத்தின் ஆட்சிதான் இங்கே நடைபெறுகிறதா என்ற சந்தேகம் எங்களுக்கு வலுக்கிறது. ஏற்கெனவே சில இடங்களில் உள்ளாட்சித் தேர்தல் பதவியிடங்கள் ஏலத்தில் விடப்படுவதாகவும், பல இடங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் மிரட்டப்பட்டுவருவதாகவும் தகவல்கள் வந்தவண்ணம் இருக்கின்றன.

எளிய மக்களின் கைகளுக்கு அதிகாரம் சென்று சேர்வதை உறுதிப்படுத்த வேண்டிய ஆளுங்கட்சியானது, தனது ஆட்சியதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களை அடக்கி ஒடுக்குவது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. இப்பிரச்சினையை உள்ளார்ந்து நோக்கினால், சமூகநீதிக்கு எதிரான சாதிய விரோதப்போக்கும் தென்படுகிறது. பொதுவாக தன்னை சாதியத்துக்கு எதிரான அரசியல் இயக்கமாக முன்நிறுத்திக்கொள்ளும் தி.மு.க-வின் நிஜமுகம் இதுதான் என்பதையும் காட்டுகிறது.

ஆக, அதிகாரம் கையில் இருப்பதைப் பயன்படுத்தி ஆளுங்கட்சியினர் அராஜகத்தைக் கட்டவிழ்த்துவிடத் துவங்கியிருப்பது கண்ணுக்குப் புலனாகிறது. இப்படிப்பட்ட சூழலில் உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக, தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி நடக்குமா என்ற கேள்விகள் வலுவாகின்றன.

வேட்பாளர்கள் மிரட்டப்படுவது, அச்சுறுத்தி வாபஸ் வாங்கவைப்பது போன்ற செயல்களைத் தடுக்க மாநில தேர்தல் ஆணையம் தவறிவிட்டது.

தேர்தல் பிரச்சாரம் முறையாக நடைபெற்று, முடிவுகள் அறிவிக்கப்பட்டு, பதவியேற்பு முடியும் வரை மாநிலத் தேர்தல் ஆணையம் விழிப்போடு செயல்பட்டு சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டியது அவசியமாகிறது.

வேட்புமனு வாபஸ் விவகாரம் காரணமாக எதிர்காலத்தில் மக்கள் நீதி மய்ய வேட்பாளருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மீண்டும் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது என்பதைக் கருத்தில்கொண்டு, காவல்துறையானது அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பளிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக, ஆளுங்கட்சியானது எதிர்க்கட்சி வேட்பாளர்களைக் கண்டு அஞ்சாமல் நேர்மையாகத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் செந்தில் ஆறுமுகம்.

**வேந்தன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment