நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மூன்றாவது அலை காரணமாக தள்ளி வைக்கப் பட வேண்டும் என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றத்திடம் தான் வைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஜனவரி 24)தெரிவித்துள்ளது.
தமிழ் நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு ஜனவரி 27ஆம் தேதிக்குள் அறிவிக்கை வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே கெடு விதித்து இருக்கிறது. அதையொட்டி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
வார்டு வரைமுறை, இட ஒதுக்கீடு உள்ளிட்ட பணிகளை முடித்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் கொரோனா மூன்றாவது அலை சமூக பரவலாக மாறிவரும் சூழலில்… நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று மருத்துவரும் தமிழ்நாடு அரசின் முன்னாள் சுகாதாரத்துறை கூடுதல் இயக்குனருமான நக்கீரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார்.
கடந்த 21 ஆம் தேதி விசாரணைக்கு வந்த இந்த வழக்கு, இன்று 24ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில்… இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது.
மருத்துவர் நக்கீரன் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர்…தொற்று பரவல் காரணமாக நீதித்துறை நடவடிக்கைகளில் கூட கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மக்கள் பங்குபெறும் தேர்தலை ஒத்திவைக்கலாம்” என்று குறிப்பிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி ஆதிகேசவலு, “இந்த விவகாரம் தொடர்பாக நீங்கள் உச்சநீதிமன்றத்தை தான் அணுக வேண்டும். உச்ச நீதிமன்றத்தை அணுகாமல் ஏன் உயர் நீதிமன்றத்தை அணுகினீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்,”மாநில தேர்தல் ஆணையம் தான் உச்ச நீதிமன்றத்தை அணுக முடியும்” எனக் கூறினார்.
இதைத் தொடர்ந்து , “தேர்தலை தள்ளி வைப்பதற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட முடியாது. தேர்தல் ஆணையம் தான் முடிவெடுக்கும். மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தலுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதை கண்டிப்புடன் செயல்படுத்த வேண்டும் என்று வேண்டுமானால் நாங்கள் உத்தரவிடலாம். தேர்தலை தள்ளி வைப்பதற்கு நாங்கள் உத்தரவிட முடியாது. நீங்கள் உச்சநீதிமன்றத்தை தான் அணுக வேண்டும்”என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
இன்று மருத்துவர் நக்கீரன் தரப்பு வாதங்கள் முடிவடையாத நிலையில்… நாளை மற்ற மனுதாரர்களின் வாதங்களும் மாநில தேர்தல் ஆணையத்தின் வாதமும் தொடர இருக்கிறது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவப்பது தொடர்பாக
உச்ச நீதிமன்றம் தான் முடிவெடுக்க முடியும் என்று உயர்நீதிமன்றம் இன்றைக்குத் அறிவித்துவிட்ட நிலையில்… மாநில தேர்தல் ஆணையம் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் பட்டியலை வெளியிடும் என அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
**வேந்தன்**
�,”