உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதில் மற்ற மாநிலங்களுக்கு தமிழ்நாடு முன்மாதிரியாக திகழ வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு வரும் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் நடத்தும் பணியில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதுபோன்று அரசியல் கட்சியினரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அதிமுக தேர்தல் பிரிவுத் துணைச் செயலாளர் இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அதில்,”அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளாட்சித் தேர்தலுக்கு ஒன்றிய அரசுப் பணியாளர்களைத் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும், பரப்புரை முதல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை காணொலி பதிவுசெய்ய வேண்டும், பறக்கும் படைகளை அமைத்து பணப்பட்டுவாடாவைத் தடுப்பதுடன் தேர்தல் பணிக்கு மத்திய ரிசர்வ் படையை அமர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மனு அளித்திருந்தார்.
இந்த மனுவைப் பரிசீலிக்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். மேலும், சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்பட்ட நிலையில், ஒன்பது மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தலை இரண்டு கட்டங்களாக நடத்துவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி தலைமையிலான அமர்வு, எதிர்க்கட்சியின் கோரிக்கை மனுவைப் பரிசீலித்து முடிவை தெரிவிக்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் மீண்டும் இந்த வழக்கு இன்று (செப்டம்பர் 30) தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, அதிமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், 2019ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலின் தொடர்ச்சிதான் இது. கடந்த தேர்தலின்போது பின்பற்றப்பட்ட நடைமுறைகளை இந்தத் தேர்தலிலும் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தியவர்,
கடந்த தேர்தலைப் போல ஒவ்வொரு மாவட்டத்திலும் மூன்றில் ஒரு வாக்குச்சாவடியில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த வேண்டும் . வாக்குப் பெட்டிகளை, ஸ்ட்ராங் ரூமுக்கு கொண்டுசெல்வதையும் அங்கிருந்து வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டுசெல்வதையும் காணொலி பதிவுசெய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
வாக்கு எண்ணிக்கை மையங்களில் மூன்று அடுக்குப் பாதுகாப்புப் போட வேண்டும். இந்த அம்சங்கள் பற்றி மாநில தேர்தல் ஆணையத்தின் பதிலில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று புகார் தெரிவித்தார்.
இதையடுத்து பேசிய தலைமை நீதிபதி, “தேர்தல் நடத்துவதில் மற்ற மாநிலங்களுக்குத் தமிழ்நாடு முன்மாதிரியாக இருக்க வேண்டும். தொழில்நுட்பம் வளர்ந்துள்ள நிலையில் தேர்தலில் எந்தப் புகாரும் வராத வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். கண்காணிப்புக் கேமராக்கள் அமைக்கப்படுவது அவசியம். கிராமங்களில் காணொலி பதிவு அவசியம்” என்று கூறினார்.
ஒன்பது மாவட்டங்களில் மட்டுமே தேர்தல் நடக்க இருப்பதால் என்ன நடைமுறைகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்து அலுவலர்களுடன் கலந்து பேசி நாளை (அக்டோபர் 1) பதிலளிக்க தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை நாளைக்குத் தள்ளிவைத்தனர்.
**-வினிதா**
�,