திமுக தேர்தல் அறிக்கையில் பொய்கள் தான் அதிகமாக உள்ளது என்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள உழவர் உழைப்பாளர் கட்சி அலுவலகமான உழவாலயத்தில் புதன்கிழமை வேட்பாளர் அறிமுகம் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவரும் தாராபுரம் சட்டப்பேரவை பா.ஜ.க. வேட்பாளருமான முருகன்,
“பிரதமர் மோடி சுயசார்பு பாரதமாக இந்தியாவை மாற்ற உள்ளார். பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி உலகிற்கே வழிகாட்டியாக இந்தியாவைத் திகழச் செய்துள்ளார். உழவர் உழைப்பாளர் கட்சி மாநிலத் தலைவர் செல்வமுத்துவின் வேண்டுகோளை ஏற்று அக்கட்சி அலுவலகமான உழவாலயத்தை நேரில் வந்து பிரதமர் மோடி திறந்து வைக்க ஏற்பாடு செய்வோம். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்கு அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம். கோவை தெற்கு தொகுதியில் பா.ஜ.க.வேட்பாளர் வானதி சீனிவாசன் மகத்தான வெற்றியைப் பெறுவார். அத்தொகுதியில் போட்டியிடும் கமல்ஹாசனால் காலையில் பொதுமக்கள் மத்தியில் நடைப்பயிற்சி செல்வதைத் தவிர எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது.
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டம், அனைவருக்கும் குடிநீர் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வரும் நிலையில் இதுபற்றி சிந்திக்காமல் திமுக விஷன் என்று ஒரு பொய்யான அறிவிப்பை அக்கட்சி வெளியிட்டுள்ளது. திமுக தேர்தல் அறிக்கையில் பொய்கள் தான் அதிகமாக உள்ளது. முந்தைய திமுக ஆட்சியில் தேர்தல் வாக்குறுதிகளை மறந்து விட்டு எவ்வாறு ஊழல் செய்யலாம் என்று தான் நினைத்தனர்” என்று பேசினார். அப்போது அவருடன் முன்னாள் எம்.பி. கார்வேந்தன், உழவர் உழைப்பாளர் கட்சி மாநிலத் தலைவர் கே.செல்லமுத்து உள்பட பலர் இருந்தனர்.
**-சக்தி பரமசிவன்**
�,