பல அவமானங்களைச் சந்தித்த பிறகுதான் முதன்மைச் செயலாளர் என்ற நிலைக்கு வந்ததாக திமுக எம்.எல்.ஏ கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்ட திமுக நிர்வாகிகள் கூட்டம் பிப்ரவரி 24 கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில், கட்சியின் தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, வடக்கு மாவட்டச் செயலாளர் தியாகராஜன், தெற்கு மாவட்டச் செயலாளர் மகேஷ் பொய்யாமொழி,திருச்சி மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதுபோன்று திருச்சி, கரூர் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
அவர்களுக்கு மத்தியில் பேசிய கே. என்.நேரு, ”1993ஆம் ஆண்டு திமுகவிலிருந்து வைகோ விலகிச் சென்றபோது அவரோடு செல்வராஜும் சென்றுவிட்ட காரணத்தால், திருச்சி மாவட்ட பொறுப்பாளராக…. சேலம் வீரபாண்டி ஆறுமுகம், கோசி. மணி உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் முன்னிலையில் தளபதியின் ஒப்புதலைப் பெற்று இந்த மாவட்டத்தின் பொறுப்பாளராக என்னைக் கலைஞர் நியமித்தார். பொறுப்பாளராக பொறுப்பேற்றது அனைவரையும் சென்று சந்தித்தேன். இதற்கு முன்னால் இருந்த வடிவேலு அவர்களை வீட்டிலேயே சென்று சந்தித்தேன்” என தனது மலரும் நினைவுகளை நினைவுபடுத்தியவர் தொடர்ந்து பேசுகையில்,
“மேடையில் அமர்ந்திருக்கும் மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நிறைய அவமானங்களை நான் சந்தித்திருக்கிறேன். நிறைய இடங்களில் அவமானப்பட்டிருக்கிறேன். ஆனால், எதையும் நான் வெளிக்காட்டிக் கொண்டதில்லை. எவர் மீதும் நான் வருத்தப்பட்டதும் இல்லை. அதனால்தான் இந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறேன்.
மாவட்டச் செயலாளர்களாக இருக்கிறவர்கள் எல்லாம் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறீர்கள். சிறுபான்மை மக்கள், ஆதிதிராவிட மக்கள் ஆகியோருடன் உங்கள் உறவு பலமாக இருக்க வேண்டும். அப்போதுதான் நம் பொறுப்பிலிருந்து வெற்றி பெற முடியும் என்று கூறினார்.
இந்த கூட்டத்தில் திருச்சி, கரூர், அரியலூர் ஆகிய பகுதிகளையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
**-கவிபிரியா**�,