{மழையில் பிறந்தநாள் கொண்டாட்டம்: கமல் அறிவுரை!

Published On:

| By Balaji

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனரும், நடிகருமான உலகநாயகன் கமல்ஹாசன் பிறந்த நாள் இன்று (நவம்பர் 7) கொண்டாடப்பட்டு வருகிறது. கனமழையின் காரணமாக தற்போது சென்னை மழை நீரில் மிதக்கும் நிலையில் மக்கள் நீதி மய்யத்தினர் இனிப்பு வழங்கி கொண்டாடி இருப்பது சென்னைவாசிகளிடையே முகம் சுளிக்க வைத்துள்ளது.

தொடர் மழை காரணமாகச் சென்னை மாநகரம் தண்ணீரில் மிதக்கிறது. மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், பிற மாவட்டங்களிலிருந்து சென்னை வருபவர்கள் இரண்டு நாட்கள் பயணத்தைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீட்டை விட்டுக் கூட வெளியில் வர முடியாமல் சென்னை மக்கள் தவித்து வரும் நிலையில், சென்னையில் கமல்ஹாசன் பிறந்தநாளுக்காகக் கொடியேற்றி இனிப்பு வழங்கியுள்ளனர்.

வேளச்சேரி தொகுதி செயலாளர் ஸ்ரீதேவி தலைமையில் திருவான்மியூர் ராஜாஜி நகர்ப் பகுதியில் இன்று காலை 11.00 மணிக்கு மழையில் குடையைப் பிடித்தபடி கொடியேற்றி இனிப்புகள் வழங்கியபோது அங்கிருந்தவர்கள் இந்த மழையில் இது தேவைதானா என்று கூறியபடி விலகிச் சென்றுவிட்டனர் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் கமல் தனது ட்விட்டர் பக்கத்தில், மநீம உறவுகளே, மழை வெள்ளத்தால் தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு வேண்டிய உதவிகளை விரைந்து செய்யுங்கள். அதுதான் நீங்கள் எனக்குத் தரும் சிறந்த பிறந்தநாள் பரிசாக இருக்கமுடியும் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.

**-வணங்காமுடி**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share