அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வருவதால், அங்கு துப்பாக்கி மீது கடுமையான சட்டங்கள் கொண்டு வர ஆலோசிக்கப்பட்டது. சில வாரங்களுக்கு முன்பு அமெரிக்காவில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடந்தது. 18 வயது இளைஞன் அந்தப் பள்ளியில் புகுந்து திடீரென்று துப்பாக்கியால் சரமாரியாக எல்லோரையும் சுட ஆரம்பித்தான். இந்தத் துப்பாக்கிச்சூட்டில் 19 குழந்தைகள், 2 ஆசிரியர்கள் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தில் போலீஸார் உடனே பள்ளியின் உள்ளே சென்று அந்த இளைஞனைக் கட்டுப்படுத்தாமல், ஒரு மணி நேரம் தாமதித்துத்தான் உள்ளே சென்றனர் என்று உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டினர். மேலும், சில நாட்களுக்கு பிறகு அமெரிக்காவில் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. ஆனால், அங்கிருந்த போலீஸ் அதிகாரி ஒருவர் தக்க சமயத்தில் செயல்பட்டதால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன.
இந்த நிலையில் அமெரிக்காவில் துப்பாக்கி வைத்திருக்க கடுமையான சட்டங்களைக் கொண்டுவர ஆலோசிக்கப்பட்டது. ஆனால், அமெரிக்கர்கள் அனைவருக்கும் கைத்துப்பாக்கி வைத்திருக்க உரிமை உண்டு என்று அமெரிக்கா நீதிமன்றம் சில நாட்களுக்கு முன்பு தீர்ப்பளித்தது.
இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், துப்பாக்கி பாதுகாப்பு குறித்த முதல் குறிப்பிடத்தக்க கூட்டாட்சி மசோதாவில் கையெழுத்திட்டார். அமெரிக்கர்களின் உயிர்களைக் காப்பாற்றும் விதமாக இந்த மசோதாவில் கையெழுத்திட்டதாக ஜோ பைடன் கூறினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்த மசோதா நான் விரும்பும் அனைத்தையும் செய்யவில்லை என்றாலும், உயிர்களைக் காப்பாற்றுவதற்காக நான் நீண்ட காலமாக அழைப்பு விடுத்துள்ள செயல்களுக்கு இது முதல்படி” என்று தெரிவித்தார். இந்த மசோதாவை அவர் ஐரோப்பாவில் முக்கிய உச்சி மாநாடுகளுக்குப் புறப்படுவதற்கு முன்பு கையெழுத்திட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
.