ஜெ சிலை உரிய முறையில் பராமரிக்கப்படும்: பொன்முடி

Published On:

| By Balaji

சென்னை, காமராஜர் சாலையிலுள்ள உயர்கல்வி மன்ற வளாகத்தில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிலை சரியாகப் பராமரிக்கப்படவில்லை என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டிருந்தார். கடந்த 17ஆம் தேதி பொன் விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு ஜெயலலிதா சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்த சென்றனர்.

அப்போது ஜெயலலிதா சிலை பராமரிப்பு இன்றி இருந்ததாகவும், காழ்ப்புணர்ச்சி காரணமாகப் பராமரிக்கப்படவில்லை என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். அதோடு சிலையை அரசால் பராமரிக்க முடியவில்லை எனில் அதிமுகவிடம் கொடுத்துவிடலாம் எனவும் கூறினார்.

இதற்குப் பதிலளித்துள்ள உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, “சென்னை, காமராஜர் சாலையில் உள்ள உயர்கல்வி மன்ற வளாகத்தில் அமைக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவச் சிலையினை நிறுவிட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அரசாணை எண்.11, நாள் 05.01.2021இன்படி, அனுமதி வழங்கப்பட்டது.

மேலும், முன்னாள் முதலமைச்சர் ஜெ ஜெயலலிதாவின் திருவுருவச் சிலைக்குத் தமிழ்நாடு அரசின் சார்பில் அவரது பிறந்தநாளன்று மாலை அணிவித்து மரியாதை செய்வது தொடர்பாக முந்தைய அரசால் 16.02.2021இல் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை மூலமாக அரசாணை வெளியிடப்பட்டது.

சுதந்திரப் போராட்டத் தலைவர்கள், வீரர்கள், தியாகிகள் உள்ளிட்டவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாட்களின்போது மட்டுமே அரசின் சார்பில் மாலையணிவித்து மரியாதை செய்யப்படும் நடைமுறையானது ஆண்டாண்டு காலமாகத் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசின் சார்பாக நிறுவப்பட்டுள்ள எந்தவொரு தலைவரின் சிலைக்கும் அரசின் சார்பாக தினசரி மாலையிடும் வழக்கம் இல்லை. இனி வருங்காலங்களிலும் அன்னாரின் பிறந்தநாளன்று மேற்படி ஜெ ஜெயலலிதா வளாகத்தில் (தமிழ்நாடு மாநில உயர் கல்வித்துறை மன்ற வளாகம்) நிறுவப்பட்டுள்ள அவரது சிலைக்கு அன்னாரின் பிறந்த நாளான பிப்ரவரி 24 அன்று தமிழ்நாடு அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்படும்.

எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம், மாநில உயர்கல்வி மன்ற வளாகத்திலுள்ள ஜெ ஜெயலலிதாவின் திருவுருவச் சிலையினை அதிமுக சார்பில் பராமரிப்பதற்கு அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அன்னாரது திருவுருவச்சிலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடம் பொதுப்பணித் துறையினால் சுத்தம் செய்யப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும், அரசின் சார்பில் சிலை மற்றும் நினைவகங்கள் யாவும் பொதுப்பணித் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் உரிய முறையில் பராமரிப்பு செய்யப்பட்டு வருகிறது.

ஆதலால், சிலைகளைத் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளிடம் வழங்கிடும் நடைமுறையில்லாத நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஜெ ஜெயலலிதாவின் திருவுருவச் சிலை அரசின் சார்பில் தொடர்ந்து நல்ல முறையில் பராமரிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

**-பிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share