தமிழகத்தில் உள்ள கிராமப்புற சிறுபான்மையினர் பள்ளி மாணவியருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் அறிவித்தார்.
சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் நேற்று (ஏப்ரல் 22) சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
அப்போது சிறுபான்மையினர் மாணவிகளின் பள்ளி இடைநிற்றலை நிறுத்த முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.
அமைச்சர் செஞ்சி மஸ்தான் வெளியிட்ட அறிவிப்பில், கிராமப்புற சிறுபான்மையின மாணவியர் இடைநிற்றல் இன்றி தொடர்ந்து கல்வி பயில மூன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை பயிலும் மாணவியருக்கு ரூ.1000 என 2 கோடியே 75 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவில் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
சென்னையில் உள்ள கிறித்துவர்கள் அடக்க ஸ்தலங்கள் அமைக்க புதிய நிலம் கையகப்படுத்தவும், சென்னையில் ஏற்கனவே உள்ள அடக்க ஸ்தலங்களில் மீண்டும் அடக்கம் செய்வதற்கு உள்ள நிபந்தனைகளைத் தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மாநில அளவில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 18ஆம் தேதி சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் கொண்டாடப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன
**-பிரியா**