காங்கிரஸ் இல்லையென்றால் என்னாகும்? நேர்காணலில் ஸ்டாலின் கேள்வி!

Published On:

| By Balaji

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி கேட்ட இடங்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் இன்று மார்ச் 4 சத்தியமூர்த்தி பவனில் மாநில, மாவட்ட நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து கூட்டணி குறித்து ஆலோசனை நடத்துகிறார் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 41 இடங்களுக்கு குறையக்கூடாது என்று ராகுல்காந்தி அறிவுறுத்தி இருப்பதையடுத்து… திமுக கூட்டணியில் அதைவிட மிகக் குறைவான இடங்கள் கிடைக்கும் பட்சத்தில் கூட்டணியை தொடரலாமா வேண்டாமா என்பது பற்றி தான் இன்று காங்கிரஸ் நிர்வாகிகளிடம் கருத்து கேட்கிறார் குண்டுராவ்.

இதற்கிடையில் அறிவாலயத்தில் நடந்து வரும் திமுக நேர்காணலில் காங்கிரஸ் உடனான கூட்டணி பற்றிய தனது உள்ளக் கருத்தை சில கேள்விகள் மூலம் ஸ்டாலின் கோடிட்டு காட்டி இருக்கிறார் என்கிறார்கள் திமுகவினர்.

கடந்த இரண்டு நாட்களாக அறிவாலயத்தில் நடந்து வரும் நேர்காணலில் திமுக தலைவர் ஸ்டாலின், பொதுச் செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகள் விருப்ப மனு கொடுத்தவர்களிடம் கேள்விகள் கேட்டு பதில் பெறுகிறார்கள்.

அந்த வகையில், “நீங்கள் எந்த பொறுப்பில் இருக்கிறீர்கள்? நீங்கள் சார்ந்த சமுதாயம் என்ன? உங்களால் எவ்வளவு செலவு செய்ய முடியும்?” என்பவைதான் கிட்டத்தட்ட அனைவரிடமும் கேட்கப்படும் பொதுவான கேள்விகளாகவே இருக்கின்றன .

அதேநேரம் தென் மாவட்ட தொகுதிகளுக்கான நேர்காணல் நடந்தபோது அதில் கலந்து கொண்டவர்களிடம் ஸ்டாலின் கூடுதலாக இன்னொரு கேள்வியையும் கேட்டிருக்கிறார்.

“காங்கிரஸ் கூட்டணியில் இல்லன்னா நம்ம வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்?” என்பது தான் அந்தக் கேள்வி. இந்தக் கேள்வியை எதிர்கொண்ட கணிசமானோர், “காங்கிரஸ் இல்லேன்னாலும் நாம ஜெயிக்கலாம்”என்று சொல்லியிருக்கிறார்கள்.

நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட சில மாவட்டங்களில் சில தொகுதிகளை காங்கிரஸ் தன் பாரம்பரிய தொகுதிகளாக கருதுகிறது. அவற்றை மனதில் வைத்து ஒருவேளை காங்கிரஸ் கூட்டணியில் இல்லாவிட்டால் அதற்கு தயாராகத்தான் ஸ்டாலின் இந்த கேள்வியைக் கேட்டிருக்கிறார் என்கிறார்கள் திமுக தென்மாவட்ட பிரமுகர்கள்.

**-வேந்தன்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share