முன்னாள் அமைச்சர் நிலோஃபர் கபில் மீது வக்ஃப் வாரியத்தின் முன்னாள் தலைவர் ஹைதர் அலி புகார்களை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.
கடந்த அதிமுக ஆட்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்த நிலோபர் கபில் மீது பண மோசடி புகாரை அவரது தனி செயலாளராக இருந்த பிரகாசம் என்பவரே டிஜிபி அலுவலகத்தில் அளித்ததால், அவர் அதிமுகவிலிருந்து கடந்த வாரம் நீக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த ஆட்சியில் வக்ஃப் வாரியத்தையும் கவனித்து வந்த நிலோபர் கபில் அதிலும் நிறைய முறைகேடுகள் செய்திருப்பதாக முன்னாள் வக்ஃப் வாரிய தலைவர் ஹைதர் அலி முதல்வருக்கு இன்று (மே 29) கடிதம் எழுதியிருக்கிறார்.
அந்தக் கடிதத்தில் ஹைதர் அலி, “தமிழகத்தில் நடைபெற்ற மக்கள் விரோத ஆட்சி அகற்றப்பட்டு தங்களது தலைமையிலான ஆட்சி அமையப்பெற்றுள்ளது.நெருக்கடியான காலகட்டத்தில் ஆட்சி பொறுப்பேற்று இரண்டு வாரகாலங்களில் நம்பிக்கையூட்டும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறீர்கள்.கடந்த ஆட்சிகாலத்தில் நடைபெற்ற பல தவறுகள் சரிசெய்யப்படுகின்றன.
அந்த வகையில் தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தில் நடைபெற்ற பல்வேறு முறைகேடுகளுக்கு காரணமானவர்கள் குறித்து தங்களது மேலான கவனத்திற்கு கொண்டு வர விழைகிறேன்.
கடந்த ஆட்சியில் வக்ஃப் வாரியத்தில் வாரிய தலைவா் இல்லாத தருணத்திலும், தலைவரின் வருகைக்குப் பிறகும், அமைச்சர் நிலோபர் எண்ணப்படியே அனைத்தும் நடைபெற்றது. நிலோபர் கபிலுடைய தூதுவராக பெண் வழக்கறிஞர் ஒருவர் செயல் பட்டார். அவ்வழக்கறிஞா் வாரிய கூட்டத்தில் எந்த வக்ஃப்க்கு ஆதரவாக ஆஜராகிராரோ அந்த வக்ஃப் க்கு சாதகமாகவே முடிவுகள் அறிவிக்கப்படும்.
மேலும் தேர்தல் அறிவிப்பு வருவதற்கு சில மணிகளுக்கு முன்பாகவே அதிராம்பட்டிணம் எம்.கே.என். மதரஸா மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகளை அறிவித்துள்ளார்கள். அமைச்சருக்கு வேண்டப்பட்டவருக்கு கூட்டு முயற்சியில்(joint venture) வக்ஃப் இடத்தை தாரை வார்க்கும் முயற்சியும் நடைபெற்றுள்ளது.
ஆகவே,அவர் இருந்த காலங்களில் நடைபெற்ற முறைகேடுகளை முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்”என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் ஹைதர் அலி,
**-வேந்தன்**
�,