vடெல்லிக்குக் கைகொடுக்கும் உச்ச நீதிமன்றம்!

Published On:

| By Balaji

உச்ச நீதிமன்ற வளாகத்தில் படுக்கை வசதிகளை ஏற்படுத்திக்கொள்ளவும், ஆர்டிபிசிஆர் போன்ற கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ளவும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி ரமணா அனுமதி அளித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவலின் கோர தாண்டவம் ஒவ்வொரு நாளும் அதிகரித்துகொண்டே செல்கிறது. அதை கட்டுப்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு மாநிலமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் முழு ஊரடங்கும், மற்ற சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கும் அமலுக்கு வந்துள்ளன.

ஒருபக்கம் நோயின் தாக்கத்தினால் மக்கள் கஷ்டப்படும்போது, மற்றொருபக்கம் போதிய மருத்துவ உள்கட்டமைப்பு இல்லாமல் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, டெல்லியில் மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பிவிட்டன. இதனால், நோயாளிகள் வெளியே படுத்து சிகிச்சை எடுக்கும் அவலநிலை உள்ளது. போதிய அளவு ஆக்சிஜன் இல்லாமல் ஏற்படும் உயிரிழப்புகள் என டெல்லியின் நிலைமை மிக மோசமாக இருக்கிறது.

இந்த நிலையில், டெல்லி அரசுக்குக் கைகொடுக்கும் விதமாக, உச்ச நீதிமன்ற வளாகத்தில் கொரோனா சிகிச்சைக்கான ஏற்பாடுகளை செய்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, உச்ச நீதிமன்ற வளாகத்துக்குள் படுக்கை வசதிகளையும், கொரோனா பரிசோதனை வசதிகளையும் ஏற்படுத்திக் கொள்ளலாம் என உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார்.

மே மாதம் 7ஆம் தேதியிலிருந்து உச்ச நீதிமன்றத்துக்கு கோடைக்கால விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறை காலத்தில் உச்சநீதிமன்ற வளாகத்தில் கொரோனா சிகிச்சை பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கலாம் என மற்ற நீதிபதிகளுடன் கலந்து ஆலோசித்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக, உச்ச நீதிமன்றத்தின் கோடைக்கால விடுமுறை மே 14ஆம் தேதி தொடங்கும். ஜூன் மாத இறுதியில் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

**வினிதா**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share