தேர்தல் ஆணைய முடிவு… சீத்தாராம் யெச்சூரிக்கு சந்தேகம்!

Published On:

| By Balaji

கேரள மாநிலத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலைத் தேர்தல் ஆணையம் திடீரென நிறுத்தி வைத்துள்ளது. இது குறித்து சிபிஎம் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி சந்தேகம் எழுப்பியிருக்கிறார்.

முன்னதாக, கேரளத்தின் காலியாகப் போகும் மூன்று மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கான தேர்தல் அடுத்த மாதம் 12ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழகம், புதுவையுடன் சேர்த்து அந்த மாநிலத்திலும் வரும் 6ஆம் தேதியன்று சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெறுகிறது.

இரண்டையுமே தேர்தல் ஆணையம்தான் அறிவித்து, அதற்கான ஏற்பாடுகளைச் செய்துவருகிறது. ஆனாலும் திடீரென, மத்திய சட்டத் துறையிலிருந்து வந்த குறிப்பு ஒன்றைக் காரணமாகச் சொல்லி, மறு உத்தரவு வரும்வரை, கேரளத்துக்கான 3 மாநிலங்களவை எம்.பி. தேர்தல் நிறுத்தி வைக்கப்படுகிறது என ஆணையம் கடந்த 26ஆம் தேதி அன்று அறிவித்தது.

மாநிலங்களவைத் தேர்தலைப் பொறுத்தவரை, ஓய்வுபெறவுள்ள எம்.பி.களின் பதவிக்காலம் முடியும் முன்னர் தேர்தல் நடத்தப்படுவது வழக்கம்.

ஐயுஎம்எல், சிபிஎம், காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த மூவரின் பதவிக்காலமும் அடுத்த மாதம் 21ஆம் தேதியன்று முடிவடைகிறது. வழக்கம்போல அதற்கு முன்னதாக 12ஆம் தேதி புதிய உறுப்பினர்களுக்கான தேர்தல் நடத்த முடிவுசெய்யப்பட்டது. இதற்கான அறிவிக்கை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தலே இடைநிறுத்தம் எனும் உத்தரவு வெளியானது.

இப்போது சட்டப்பேரவையில் இருக்கும் பலத்தின்படி, இடது ஜனநாயக முன்னணி இரண்டு இடங்களையும் கைப்பற்றும். முன்னணிக்கு உள்ளேயே யார் யார் வேட்பாளர் என்பது பற்றியும் அந்தந்தக் கட்சிகளும் முடிவெடுத்திருந்தன.

திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய யெச்சூரி, உள்நோக்கத்துடன் கேரள மாநிலங்களவைத் தேர்தலில் ஆணையம் செயல்படுகிறதோ என சந்தேகம் தெரிவித்தார்.

புதிய சட்டப்பேரவை தேர்வுசெய்யப்பட்ட பிறகு, இந்தத் தேர்தலை நடத்த அவர்கள் திட்டமிடலாம் என்று கூறிய அவர், அறிவிக்கப்பட்ட தேர்தலை இப்படி நிறுத்திவைத்திருப்பது அப்பட்டமான அரசியல் சாசன விரோதம் என்றார்.

**- இளமுருகு**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share